
இந்தியா வருகை தந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி நேற்று பாகிஸ்தான் சென்றார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பாகிஸ்தானுக்கு தலிபான்கள், ஹக்கானி, லஸ்கர்–இ–தொய்பா மற்றும் பல தீவிரவாத குழுக்களின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அவர்களால் பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கும் அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே தீவிரவாத குழுக்கள் வளராமல் தடுப்பது நமது பொறுப்பாகும். பாகிஸ்தானில் கடந்த 16–ந்தேதி பெஷாவர் ராணுவ பள்ளியில் 142 குழந்தைகளை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அந்த தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாகிஸ்தான் பாரபட்சமின்றி அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் இலக்கு வைத்து தாக்கி அழிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை முற்றிலும் முடித்தே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் நீண்ட நாட்களாக இரட்டை வேடம் போட்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் சந்தேகிக்கின்றன. சில தீவிரவாத அமைப்புகளுடன் போரிடும் அதே நேரத்தில் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர்களை ராணுவ தளபதிகள் பயன்படுத்தியும் வருகின்றனர். அதனால் தான் அவர் கடுமையாக எச்சரித்தார்.
மேலும் அவர் கூறும் போது, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire