டில்லியில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி
ராஜபக்ஷே கலந்து கொள்வதை முன்னிட்டு, பதவியேற்பு நடைபெறும் அரங்குக்கு
வெளியே ‘புலி கொடியுடன் ஓடும் சாகச நிகழ்ச்சி’ ஒன்றுக்கான அசைன்மென்ட்,
செந்தமிழன் சீமானுக்கு ஆஃபர் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு புலிப் பிரிவான நெடியவன் படையணியால் வழங்கப்பட்டுள்ள அந்த
ஆஃபரை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என சீமான் முகாமில் ஆராயப்படுகிறது
என்கிறார்கள்.
‘புலி கொடியுடன் ஓடும் சாகச நிகழ்ச்சி’ என்றால் என்னவென்று தெரியாத வாசகர்களுக்காக ஒரு விளக்கம்:
இந்த அதிவீர சாகசச் செயல், வெளிநாடுகளில் இலங்கை அணி கிரிக்கெட்
விளையாடும் மைதானங்களில் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். விளையாட்டு
மைதானத்துக்கு பார்வையாளர் போல செல்லும் தேசிய வீரர் ஒருவர், திடீரென
புலிக் கொடியுடன் மைதானத்துக்குள் துள்ளியோடுவார்.
லோக்கல் போலீஸ் அவரை மஞ்சு விரட்டில் மாடு பிடிப்பதுபோல துரத்திச்
சென்று பிடித்து வருவார்கள். யுத்தத்தில் ஜெயித்துவிட்டு வரும் தளபதிபோல,
இருபுறமும் கையை அசைத்துக் காட்டியபடி பவிலியனுக்கு திரும்புவார் (இழுத்து
வரப்படுவார்) அவர்.
இதற்கெல்லாம் வெளிநாட்டு போலீஸ் கைது செய்ய மாட்டார்கள்.
வீரனை ‘நியூசென்ஸ் கேஸ்’ என்று மேட்ச் முடியும்வரை பெஞ்சில் இருத்தி
வைத்துவிட்டு, முதுகில் தட்டி, ‘go and see a good doctor” என்று சொல்லி
அனுப்பி விடுவார்கள்.
ஆனால், சிங்கள ராணுவத்தை யுத்தத்தில் ஜெயிப்பதற்கு ஒப்பான தீரச் செயலாக இந்த சாகச நிகழ்வு, தேசிய ஊடகங்களில் வர்ணிக்கப்படும்.
நல்ல வேளையாக, புலிக்கொடி காத்த குமரன் மைதானத்துக்குள் ஓடும்போது
அணிந்திருந்த டி-ஷர்ட், ஷூ ஆகியவற்றை ஏலம் விட்டு, ‘இறுதி
யுத்தத்துக்கு(?)’ நிதி சேகரிக்கும் நடைமுறை இன்னமும் தொடங்கவில்லை. (அட..
இந்த ஐடியா நல்லாயிருக்கே!)
பிரான்ஸில் உள்ள நெடியவன் படையணி பொறுப்பாளர், செந்தமிழன் சீமானை போனில்
அழைத்து, “தமிழனின் வீரத்தை பறைசாற்றும் சாகச நிகழ்வை செய்து, டில்லி
வரும் ராஜபக்ஷேவுக்கு வரலாறு காணாத தோல்வியை கொடுக்கலாம்” என்று கோரிக்கை
விடுத்துள்ளார்.
இந்த சாகசத்தை செய்வதற்காக அற்புதமான compensation package ஒன்றும், ஆஃபர் செய்யப்பட்டதாக தெரிகிறது.
வழமையாக இந்த வெளிநாட்டு படையணி மாஸ்டர்களும், அம்மான்களும்
சொல்வதற்கெல்லாம் உடனே தலையாட்டும் சீமான், இம்முறை சற்றே தயங்குவதாக
தெரிகிறது.
என்ன காரணம்?
தமிழகத்தின் எந்த நகரத்தில் புலிக்கொடியுடன் ஓட வேண்டுமானாலும், சீமான் ரெடி.
புலிக்கொடியென்ன, நிஜ புலியை சங்கிலியில் கட்டி இழுத்து கொண்டு ஓடவும் அவர் தயாராக உள்ளார்.
ஆனால், இந்த பதவியேற்பு டில்லியில் அல்லவா நடக்கிறது?
ஏற்கனவே, தீவிரவாத அச்சுறுத்தலில் மகா டென்ஷனில் உள்ள டில்லி போலீஸ்,
தீவிரவாதி என்று நினைத்து நம்ம ‘கொடிப் புலியை’ நோக்கி எந்திர துப்பாக்கியை
திருப்பி விட்டால்…?
இதுதான் சீமானின் தயக்கத்துக்கு காரணம் என்கிறார்கள், பிரான்ஸில் உள்ள நெடியவன் படையணி வட்டாரங்களில்.
“என்னங்க சார், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு டில்லிக்காரங்க தடை
போட்டிருக்காங்க… நீங்க புலிக்கொடியுடன் ஓட சொல்றீங்க! பேசாம
புலிக்கொடிக்கு பதிலா, தமிழீழ தேசியப் பறவை செண்பகம், பனைமரம், முசல்குட்டி
என்று வேறு படம் போட்ட கொடியை வெச்சுக்குவோமா” என சீமான்
கேட்டிருக்கிறார்.
“முசல் குட்டியா? சரியாப் போச்சு. யாரோ வெட்டினரி டாக்டர் வருகிறார்
என்று நெனைச்சிடுவாங்க.. புலிக்கொடிதான் சிறப்பு, அதுதான் வீரம்..
உங்களுக்கு தெரியாதா அண்ணே..” என பிரான்ஸில் இருந்து கீ
கொடுத்திருக்கிறார்கள்.
“இல்லீங்க.. புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம்ன்னு டில்லிக்காரங்க தடை செஞ்சுட்டாங்களே..” என சீமான் இழுத்தாராம்.
“அட, இது அந்த புலியின் கொடியல்ல.. இது தமிழன் கொடி, சோழ மன்னனின் புலிக்கொடி என்று நீங்க சொல்லி விடலாம்” என ஐடியா கொடுக்கப்பட்டது.
இப்படி சொன்னதும் சீமான் ஒருதடவை தான் அணிந்திருந்த சிவப்பு பனியனை
பார்த்தார். காரணம், புலி சின்னம் போட்ட பனியன்களையே அவர் அணிவது வழக்கம்.
அவரது பனியனில் அச்சிடப்பட்டு இருந்த புலி படத்தின்கீழ் இரு
துப்பாக்கிகள் நீட்டிக்கொண்டு இருந்தன. புலியை சுற்றி துப்பாக்கி
தோட்டாக்களும் இருந்தன.
சீமான் படித்த காலத்தில், சரித்திர பாட வகுப்பில், எந்த சோழ மன்னனும்
துப்பாக்கி பயன்படுத்தியதாக ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததில்லை (அல்லது,
‘துப்பாக்கிச் சோழன்’ பாடம் நடந்த கிளாஸூக்கு அவர் கட் அடித்து விட்டார்).
இதனால், “உங்க ஐடியா நல்ல ஐடியாதான். எதற்கும் என் தம்பிகளுடன் கலந்து
ஆலோசித்துவிட்டு பதில் கூறுகிறேன்” என கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம்
சீமான்.
தற்போது சீமான் முகாமில், தீவிர ஆலோசனை நடக்கிறது.
பார் புகழும் வீரனாக உருவெடுக்க ஒரு அரிய சந்தர்ப்பம் சீமானுக்கு
கிட்டியுள்ளது. சீமான் என்ன முடிவை எடுப்பாரோ! தமிழினமே காத்திருக்கிறது.
பதவியேற்பு விழாவுக்கு இன்னும் சில மணி நேரமே உள்ளது! கடிகாரம் ஓடுகிறது, டிக்.. டிக்.. டிக்..