mardi 5 juillet 2016

காதல் முறிவு முன்னாள் போராளி என்பதால் இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் முன்னாள் போராளியென்பதால் காதலில் ஏற்பட்ட இடைமுறிவு காரணமாக இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவமானது நேற்றுமுன்தினம் அச்சுவேலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த விஜயனாத் (27 வயது) என்பவரே தற்கொலை செய்துகொண்டவராவர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

குறித்த இளைஞன் ஒர் முன்னாள் போராளியாவார். இவர் கடந்த எட்டு வருடங்களாக யுவதியொருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் போரில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரது ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த இருவருடங்களுக்கு முன்னர் இவர் காதலித்து வந்த பெண்ணின் தந்தை இவரது கண்பார்வை குறைபாட்டையும் முன்னாள் போராளி என்பதையும் காரணம் காட்டி இவர்களது காதலை தடுத்திருந்தார். அத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அவர் தனது மகளுக்கு வேறு திருமணம் ஒன்றையும் செய்துவைத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த குறித்த இளைஞன் மதுவுக்கும் அடிமையாகியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீடு வந்த இவர் இரவு 10 மணியளவில் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றிருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டார் இவரை தேடிச்சென்றுள்ளனர்.

இதன்போது இவர் வீட்டிற்கு அண்மையில் இருந்த காணியொன்றுக்குள் நஞ்சருந்திய நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக இளைஞனை அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதும் குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.

மேலும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான மரணவிசாரணையை யாழ். போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார். அத்துடன் குறித்த இளைஞன் பெற்றோரை இழந்திருந்த நிலையில் உறவினர்களுடனேயே வசித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire