dimanche 12 avril 2015

கடத்தியது கருணா குழுவினரே! ஆணைக்குழு முன் யுவதி சாட்சியம்!

கண்ணமுத்து சத்தியநாதன் எனும் தனது கணவரை, 2008ம் ஆண்டு கருணா குழுவினர் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் தனது கணவர் காணாமல் போய்விட்டதாகவும், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா என்பவர் காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அமர்வின்போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார். 
வீரையடி வீதி விநாயகபுரம் எனும் முகவரியைச் சேர்ந்த மேற்படி பெண் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் எமது வீட்டுக்கு கருணா குழுவைச் சேர்ந்த சிலர் வந்து விசாரணையொன்றின் நிமித்தம் தேவைப்படுவதாகக் கூறி, எனது கணவரை அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவர் இன்றவரை திரும்பவில்லை.
கருணா குழுவினரின் அலுவலகமொன்று எமது வீட்டுக்கு அருகாமையில் இருந்தது. அங்கு சென்று, எனது கணவர் பற்றி விசாரித்தேன். ஆனால், அவர்கள் எதுவித தகவலையும் கூறாமல் என்னை விரட்டிவிட்டனர்.
எனது கணவரை அழைத்துச் சென்றவர்களில் தயாபரன் என்கிற நபரொருவரும் இருந்தார். அவரும் கருணா குழுவைச் சேர்ந்தவர். தயாபரன் எனும் அந்த நபர், தற்போது ஆலையடிவேம்புப் பகுதியில் திருமணம் செய்துள்ளதாக அறிகிறேன்.
என்னுடைய கணவரை கருணா குழுவினர் அழைத்துக் கொண்டு சென்றமையை எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணமுத்து, வித்தியாபதி ஆகியோரும் கண்டுள்ளார்கள். எனது கணவர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தேன்.
எங்கள் பகுதியில் கருணா குழுவினர் இருந்த அலுவலகமும் இப்போது இல்லை என்றார்.
அப்பட்டமான பொய்! ஆதாரமற்ற குற்றச்சாட்டு!- கருணா மறுப்பு
விநாயகபுரத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த போது எனது பெயரைக் குறிப்பிட்டு என்மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட காலத்தில் உண்மையில் நான் இலங்கையிலேயே இருக்கவில்லை. என கருணா என்ற வி.முரளிதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அப்படியிருக்க சகோதரி ஏன் அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை. இது அப்பட்டமான பொய், ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தனது பெயரைக் கெடுப்பதில் சிலர் கங்கணங்கட்டிக் குறியாகச் செயற்பட்டு வருகின்றனர். அத்தகையதொரு சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம் என முரளிதரன் எம்.பி. தெரிவித்தார்.
சகோதரி சசிகலா மட்டுமல்ல முன்னாள் எம்.பி. சந்திரநேருவின் புதல்வரும் என்மீது இவ்வாறுதான் குற்றஞ்சாட்டினார். அதுவும் திட்டமிட்ட பொய்யானதொரு குற்றச்சாட்டு.
உண்மையில் இந்த ஆணைக்குழு முன்பாக நானாக முன்வந்து பல உண்மைகளை முன்வைத்தேன். அவை பதிவில் உள்ளது.
முதலில் என்னை கருணா குழு என அழைப்பதை நிறுத்த வேண்டும். அத்தகையதொரு குழு என்னிடம் எப்போதுமே இருக்கவில்லை.
நான் 2004ம் ஆண்டு புலிகள் அமைப்பலிருந்து விலகியது முதல் தனித்து எனது போக்கில் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக இயங்கி வருகிறேன்.
பின்னர் தேசியக் கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் உயர்பதவியில் அமர்ந்து அமைச்சர் பதவியை வகித்து மக்களுக்குச் சேவை செய்து வந்தேன். இப்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் சேவை புரிகின்றேன்.
காணாமல் போனோருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நானும் கவலைப்படுகிறேன்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் நான் அங்கம் வகிக்கவே இல்லை. என்னை அக்கட்சியுடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறானது எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire