vendredi 3 juin 2016

100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி:-
100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி:-

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மழை காரணமாக ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர்.

ஒரு வாரமாக மழை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. பாரீஸில் ஓடும் ஸுன் நதியின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் வெள்ளம் புகுந் துள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித் துள்ளது.

மத்திய பிரான்ஸில் உள்ள சோப்பீஸ் சர் லோயிங் நகரில் கனமழை பெய்து வருகிறது. அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தங்களை காப்பாற்றக் கோரி தொலைபேசி யில் உதவி கோரியுள்ளனர். அந்தப் பகுதிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பாரீஸ் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரான்ஸில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மானுவேல் வால்ஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

ஜெர்மனியில் 8 பேர் பலி

ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. முனிச் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

பவேரியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தரைத்தளங்களை விட்டு வெளியேறி மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மழை காரணமாக ஜெர்மனியில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரை காணவில்லை. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பவேரியா மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire