vendredi 18 décembre 2015

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில்,









IMG_2431IMG_2420IMG_2461IMAG2246Screen-ShottIMG_8945IMAG2241IMG_8908IMG_8919IMG_8958Screen-ShoScreen-Shot-20
 போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப் படுவதில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போது காணாமல்போனோரின், உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் - அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவேண்டும் என்றும் - குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பாக போரால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிவில் மக்கள் குறித்தோ அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்தோ எதுவும் குறிப்பி டப்பட்டிரு க்கவில்லை.

சமூக சேவைகள் திணைக்களத்தின் படி வட மாகாணத்தில் நிரந்த காயங்களுக்கு உள்ளானவர்கள் 19.826 பேர் வாழ்ந்துவருகின்றனர்.

19.826 பேர்தான் வட மாகாணத்தில் இருக்கின்றனர் என திணைக்களம் தெரிவித்தாலும், இது இருமடங்காக இருக்கலாம் என்கிறது வவுனியாவில் இயங்கும் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம்.

"கிட்டத்தட்ட நிரந்தர காயத்திற்குள்ளான 40,000 பேர் வட மாகாணத்தில் இருக்கின்ற அதேவேளை, அதில் 80 வீதமானோர் போரினால் காயத்தி ற்குள்ளா னர்வர்கள்" என்று கூறுகிறார் வவுனியா வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வெள்ளையன் சுப்ரமணியம்.

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் வெள்ளையன் சுப்ரமணியம் கண்பார்வையை இழந்திருக்கிறார்.

போர் முடிவடைந்த காலப்பகுதியில் அதிகப்படியான உதவிகள் கிடைத்தபோதிலும் இப்போது சொல்லிக்கொள்ளும் படி அவ்வாறு கிடைப்பதில்லை என்கிறார் வெள்ளையன்.

இருந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, பொருட்களைக் கொண்டு நேர்மையான முறையில் சேவை செய்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.

இருப்பினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியில்லாம் கஷ்டப்பட்டுவருகின்றனர்.

ஒரு சிலர் வசதியோடு வாழ்ந்தாலும் அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் சிலர், நல்லுள்ளம் கொண்டவர்களால் ஒரு தொகை பணம் செலுத்தி வாங்கிக்கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சிலர், தாங்கள் வருடக்கணக்கில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் தருவாயில் இருக்கின்றனர்.

முன்னாள் போராளியான ஒருவர் - இடுப்புக்குக் கீழ் இயங்காதவர் - புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டவர், 5 வருடங்களுப் பின் 'மாற்றம்' அரசின் கீழ் இயங்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

இன்னுமொரு முன்னாள் பெண் போராளி, அவருக்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் இடுப்புகுக் கீழ் இயங்காது. தடுப்பிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ள கணவரின் தொலைப்பேசி இலக்கத்தைக் கேட்டு, அங்கவீனமானவர் என்று பார்க்காமல் இனந்தெரியாத மூவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே, தெற்கில் போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றபோது, அதே போரில் காயமடைந்த தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்; தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் மாதம் 10) முன்னிட்டு 'மாற்றம்' தளம் போரில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிலரின் குரல்களை இங்கு பதிவு செய்கிறது.

பதவியா, பொரளை, குருணாகல், மீண்டும் பதவியா, கண்டி, வவுனியா, கொழும்பு காசல், மீண்டும் பொரளைக்கு, ராகம ...

சுமார் 3 வருடங்கள் மதிவாணன் தயாகினி சிகிச்சைக்காக இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளே மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கும்போது தயாகினியின் கழுத்துப் பகுதியை துப்பாகி ரவை துளைத்துச் சென்றுள்ளது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக வரிசையாக அனுப்பப்பட்டிருக்கிறார்.

சிகிச்சைகள் முடிந்து திருகோணமலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தயாகினி தனது கணவர் மதிவாணனுடன் குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் சென்ற பின்னர்தான் பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

"இன்டக்கு வரைக்கும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கல்ல. வீட்டுத்திட்டமோ, அரச உதவிகளோ அல்லது தனியார் நிறுவன உதவிகளோ எதுவும் கிடைக்கல்ல. போய் கேட்டா, யாழ்ப்பாணத்தில யுத்தம் நடக்கேல்ல, அதனால உதவிகள் செய்ய ஏழாது என்டு சொல்லினம் "என்று கூறுகிறார் தயாகினி.

"ஆனால், இந்த அரசாங்கம் மாறுனதிலிருந்து மருத்துவ கொடுப்பனவு என்டு சொல்லி மாதம் மூவாயிரம் டி.எஸ். ஒபிஸால தருவினம். அதவிட சமுர்த்தி முத்திரையும் இந்த வருஷம்தான் தந்தவ "என்கிறார் தயாகினி.

தயாகினியால் அவருடைய வேலைகளையே செய்துகொள்ள முடியாத நிலை. கணவன் மதிவாணன்தான் அவருடைய, மகனுடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

"தொடர்ந்து என்னைப் பராமரிக்க வீட்டிலேயே ஒரு ஆள் தேவை. அவர் வெளி வேலை ஒன்டுக்கும் போறதில்ல. வயரின் வேலையும் செய்தவர். இப்ப வெளியால போக ஏலாத நிலமையால போறதில்ல. அப்படி வேலைக்குப் போனாலும் முழு நேரமும் இருந்து வேலை செய்ய முடியாது. காலையில எங்கட வேலைய முடிச்சி, மதியம் சாப்பாடு தாரத்துக்கு திருப்பி வரனும். திருப்பி இரவுக்கு வரனும். அதால வெளி வேலைக்கு ஒன்னும் போறதில்ல. என்ன விட்டுட்டும் போக ஏலாது. அதால போறதில்ல "என்று உருக்கமாக கூறுகிறார்.

"நாங்க இப்ப எங்கட அக்காட வீட்டுல ஒரு ரூம்லதான் இருக்கிறம். எங்களுக்குச் சொந்தமா வீடு இல்ல. காணியிருந்தும் வீடு கட்ட முடியாம இருக்கிறம். தற்காலிக வீடு கூட எங்களுக்குத் தரேல்ல. எங்களுக்கு இப்போதைக்கு டொய்லட் வசதியோட வீடொன்டுதான் அவசரமா தேவைப்படுது "என்று கூறுகிறார் தயாகினி.

பக்கத்து காணியில் அடுத்த வருடம் ஜனவரிக்கு குடியேறுவதற்காக நான்கு மரங்களை நாட்டி தகரங்கள் போட்டுள்ள கொட்டிலொன்றை மதிவாணன் காட்டுகிறார். தொடர்ந்து வீட்டாருக்கு கஷ்டத்தை கொடுக்காமல் தனியாகச் சென்று வாழ இருவரும் முடிவெடுத்து விட்டனர்.

"எங்கள மாதிரி யாழ். மாவட்டத்தில நிறைய பேர் இருக்கினம். எனக்குத் தெரிய 18, 19 பேர் இருக்கினம். அவைகளுக்கு இப்படி உதவியென்டு எதுவும் கிடைக்கிறதில்ல. அவைகளுக்கும் உதவி கிடைச்சா நல்லா இருக்கும் "- என்கிறார் தயாகினி.

நான்: காலையில என்ன சாப்பாடு?

நவீந்திரன்: மரவள்ளி,

நான்: மத்தியானம்?

நவிந்திரன்: ஒன்டுமில்ல ...

இடம்: வட்டக்கச்சி, சம்புக்குளம்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் படுத்திருந்த நவீந்திரனுக்கும் எனக்குமான உரையாடலே மேலிருப்பது.

அனேகமானோரின் நிலை இதுதான்.

வைத்தியர் ஒருவரின் மூலமாக இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவீந்திரனுக்கு தவணை முறையில் செலுத்தக்கூடிய வகையில் ஆட்டோ ஒன்று கிடைத்திருக்கிறது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் - கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவே இது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தைக் கொண்டுநடத்துகிறார் நவீந்திரன். ஆனால், கடன் கொடுக்க வேண்டியிருந்ததாலும், தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட காய்ச்சலினாலும் ஆட்டோவுக்கான புத்தகத்தை அடகுவைத்துள்ளார் நவீந்திரன். மாதம் 13,000 கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார் அவர்.

"13,000 கட்டனும் மாதம். இப்போ அரியஸா 60,000 கிட்ட வந்திருக்கு. சிலநேரம் அரியஸ்னால தூக்கினமோ தெரியாது. ஆட்டோ கைவிட்டுப் போயிருச்சென்டா வாழ்க்கையே சரி ... அது இருக்கிறதாலதான் ஹொஸ்பிட்டலுக்கு எல்லாம் பொய்ட்டு வாறன். திருப்பி எடுக்கக்கூடிய வல்லமையும் எங்ககிட்ட இல்ல. சாப்பாடு இல்லையென்டா பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம். வருத்தமென்டா கிளிநொச்சிக்குதான் போகனும். ஆட்டோ இல்லாம கஷ்டம் "- என்று கூறுகிறார் நவீந்திரன்.

நவீந்திரனின் மனைவி, 6 ஆம் தரத்தில் படிக்கும் மூத்த மகளுடன் உதவி பெறுவதற்காக உறவினர் வீடொன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறுகிறார் நவீந்திரன்.

"கோழியும் வளர்த்து பார்த்தனான் .... அடுத்தடுத்து விடக்கூடிய மாதிரி காசு இல்லதானே. ரெண்டு செட் வளர்த்தன். அதில வந்த காச கடனுக்கும், ஆட்டோ லீசிங்கிங்கும் கொடுத்து முடிஞ்சிருச்சி. கோழி வாங்கித்தந்தா வீட்டோட இருந்து பார்த்துக்கலாம் "என்கிறார் அவர்.

4 ஆம் தரத்தில் படிக்கும் இளையவன் நவீந்திரனினுடன் அவருக்கு உதவியாக, துணையாக அருகிலேயே அமர்ந்திருக்கிறான்.

கிளிநொச்சியில் பிள்ளைகள் இருவருடன் இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் வாழ்ந்துவரும் முன்னாள் இளம் பெண் போராளி ஒருவரை சந்திக்கச் சென்றேன்.

2000 ஆம் ஆண்டு முகமாலையில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின்போது ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி இடது காலை இழந்தவர் இவர். அத்தோடு, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் இடுப்புக்குக்கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிரந்தரமாக உட்கார்ந்து விட்டார்.

"தலையில் இருந்து உள்ளங்கால் வரை பீஸ் (இரும்புத் துண்டுகள்) இருக்கிறது. அதனால், மழை என்றாலும் வெயில் என்றாலும் அடிக்கடி உடல் ரீதியான பிரச்சினைகள். தலைவலி தொடங்கினால் கை, கால்கள் எல்லாம் வீங்கத் தொடங்கும். 6 வருஷமா படுக்கைப் புண் இருக்குது "என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் போராளி.

கணவனுடன் இருக்கும் படங்கள் டிவியின் மேலும், உடைந்த சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணவர் வீட்டில் இல்லையா என்று கேட்டேன்?

"அவர் வௌியில இருக்கார். அவரும் என்னைப் போல முன்னாள் போராளி ஒருவர்தான். இயக்கத்தில இருந்து விலத்தி வந்துதான் என்னைத் திருமணம் செய்தவர். இடம்பெயர்ந்து முகாமுக்கு வந்தபோது கணவர பிடிச்சுக்கொண்டு பொயிட்டினம். பிறகு சித்திரவதை செய்த பிறகுதான் விட்டினம். ஒரு நாள் அவர் வேலைக்குப் போய் திரும்பி வரல்ல. திடீரென்று காணாமல்போயிட்டார். அவரைத் தேடாத இடமில்ல. சில மாதங்களுக்குப் பிறகுதான் ஒஸ்ரேலியாவில இருக்கிறதா கோல் பண்ணார். பிறகு அங்கயும் கஷ்டமென்டு ப்ரெண்ட் ஒருத்தர்ட உதவியோட பிரான்ஸ் போயிட்டார். அங்க இதுவர அவருக்கு 'கார்ட்' கிடைக்கல்ல. இடைக்கிட காசு அனுப்புவார். அதுக்குப் பிறகு நானும் பிள்ளைகளும் அம்மாவும்தான் வாழ்ந்து வந்தோம். அம்மா இரத்தப் புற்றுநோய் வந்து 2012 மோசம் போயிட்டா. இப்ப நாங்க மூன்று பேருதான் இருக்கிறம் ".

கண்களில் கண்ணீர் வலியவில்லை. குரலில் நடுகமும் இல்லை. திடமாகப் பேசுகிறார்.

"2014.6.3 ஆம் திகதி இனந்தெரியாத 3 பேர் வந்து கணவர்ட போன் நம்பர கேட்டு என்ன அடிச்சதோட, வீல் செயாரயும் வெளியில தள்ளிவிட்டு பொயிட்டினம். தலையில, கையில, கால்ல காயமென்டதால ஒரு மாசமா ஹொஸ்பிட்டல்ல இருந்தன். பொலிஸில, மனித உரிமைகள் ஆணைக்குழுவுல என்ரி போட்டனான். ஆனா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கல்ல. இனந்தெரியாத ஆக்கள் என்டதால கண்டுபிடிக்க முடியாது என்று பொலிஸால சொல்லினம் ".

மகளை அழைத்து டிவியின் கீழ் இருக்கும் பையொன்றை எடுத்துவருமாறு கூறுகிறார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த வெளியான பத்திரிகை, இணையத்தள செய்திகளின் பிரதிகள் அடங்கிய பை அது. 5, 6 தாள்களைத் தந்தார். இணையதளங்கள் முந்திக்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தன, "முன்னாள் பெண் போராளி மீது இனந்தெரியாதோர் தாக்குதல்".

காயப்பட்ட நாளில் இருந்து அரசாங்கம் உதவி எதுவும் செய்யவில்லையா என்று கேட்க?

"நான் காயப்பட்டு 15 வருஷமாகிட்டு. அரசாங்கமோ, இல்ல வேறு யாரோ எந்த உதவியும் செய்யல்ல. இருந்த சமுர்த்தியையும் புதுசா வந்த அரசாங்கம் வெட்டிட்டது. வட மாகாண சபையால மாதத்துக்கு 1,500 ரூபா கொடுக்குறாங்க. அந்தக் காச மட்டும்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறன்.

"நாங்க ஏழாத ஆக்கள் என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. இவைக்கு கொமட் வசதி இருக்குதா? பாத்ரூம் வசதி இருக்குதா? இருக்குதா கிணறு? இருக்க வீடு இருக்குதா? என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. எந்த நிறுவனமும் வந்து பார்க்கல்ல. ஒரே ஒரு நாள் ஜி.எஸ். வந்தார். அதுவும், நாங்கள் என்ன மரக்கன்று வச்சிருக்கம், எவ்வளவு வருமானம் என்டு கேட்டுப் போனார். அவ்வளவுதான் ".

"நாங்களா உழைச்சாதான் சாப்பிடலாம். ஏழாதென்டு சொல்லி எந்த நிறுவனமும், எந்த அரசாங்கமும் உதவ வராது. கட்டில் கூட நான்தான் காசு குடுத்து வாங்கினன் ".

தான் யாரையும் நம்பியிருக்கவில்லை என்பது அவரது வார்த்தைகளால் தெரிகிறது. இடையிடையே வந்துபோகும் அம்மாவின், தந்தையின் உதவியுடன் அன்றாட தேவைக்கென்று தோட்டம் செய்வதாகக் கூறுகிறார் அவர். நான் சென்றிருந்த அன்றும் வயதான ஒருவர் அரைக் காற்சட்டையுடன் மண்வெட்டியுடன் தோட்டத்தில் நின்றிருந்ததைக் கண்டேன்.

தற்போது தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சக்கர நாற்காலியின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், அதன் பின்னர் தான் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார் என்றும் அவர் கூறுகிறார்.

"நான் தனியாத்தான் வீட்டு வேலைகள செய்றன், அதோட டவுனுக்குப் போகனும்,                             by Selvaraja Rajasegar

Aucun commentaire:

Enregistrer un commentaire