dimanche 20 septembre 2015

போதி தர்மர் பற்றிய வெளிவராத சில உண்மைகள்

போதிதர்மாவைப்பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக்கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக்கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.
போதி தர்மா குகை :போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப்புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா மன்னர் ’வூ-டி’யைச்சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக்கடந்து ஹெனான் பகுதியின் மலைச்சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு சென்றுள்ளார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப்பார்த்த போது அவருக்குப்பெரிதும் ஏமாற்றமாக இருந்தது.
நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக்கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது.
போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச்சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப்பார்த்த படி அமர்ந்து தியானம் செய்ததாகச்சொல்லப்படுகிறது.
9 வருடங்கள் தியானம் இருந்த போதி தர்மாவின் நிழல் குகையின் பாறையில இருப்பதாக நம்பப்படுகிறது. ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பிய போது அந்த இடத்தில் இரும்புப்பெட்டி ஒன்றை விட்டுச்சென்றுள்ளார். பிட்சுக்கள் அதைத்திறந்து பார்த்த போது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார்.
இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார்.
மஜ்ஜை என்பது அகத்தைக்குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப்போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்.
இதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச்சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச்சென்றார்? இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம்.
போதிதர்மா ஓஷோவைக்கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார்.
ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி. அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச்செல்லும் படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன.
கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச்சூழலில் தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப்பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப்புரட்சி.
புத்தரைப்போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக்கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது.
புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத்துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார். அரச வாழ்வைத்துறந்து ஆன்மத்தேடலில் நாடோடியாகக்கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத்தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத்தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால் தான் காப்பாற்ற முடியும்? எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப்புறப்பட்டவர் தான் போதிதர்மா.
தன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு – வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.
ஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத்தொடுவது.
மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக்கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச்சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக்கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச்சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில் தான் விழுவீர்கள்.” இந்த விடையைக்கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது.
போதிதர்மா ஏன் அப்படிச்சொன்னார்? அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும் தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப்பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார்.
போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும். சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.
போதிதர்மாவைப் பற்றிப்பேசும் போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விசயம் தேநீர். குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் போற்றப்படுவது போலவே தேநீரைக்கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார்.
போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித்தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத்தன்மீதே கோபம் வந்தது.
ஒரு நாள் அவர் தன் இமைகளைப்பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழுந்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக்கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக்குடித்த போது சோம்பலை நீக்கிப்புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக்கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
போதிதர்மா தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப்பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும்.
முண்டு முடிச்சு உள்ள அந்தத்தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப்பிடித்துக்கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத்தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக்காட்டுவார்.
இதையெல்லாம் படிக்கும்போது அவர் ஒரு தமாஷ் பேர் வழியாக நமக்குத்தெரியலாம். அது உண்மைதான். ஜென் நெறியில் தமாஷ் செய்யத்தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
சூஃபி மரபில் நகைச்சுவைக்கு ஒரே ஒரு முல்லா நஸ்ருத்தீன் மட்டுமே இருக்கிறார். ஆனால் ஜென்னில் ஏறத்தாழ எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!
போதிதர்மா தன் கடைசிக்காலத்தில் இமயமலைப் பகுதிக்குச்செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத்தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒரு சில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப்புதைத்துவிட்டார்கள்.
இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக்காவல்காரன் ஒருவன் பார்த்துள்ளான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத்தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச்செருப்பைக் கட்டித்தொங்க விட்டிருப்பதைக்கண்டு அதற்கான காரணத்தை கேட்டான். “மடாலயத்திற்குப்போய் என்னை நீ இந்தக்கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக்கடந்து இமயமலைக்குச்சென்றுவிட்டார். அந்தக்காவலன் மடாலயத்திற்குச்சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச்சொன்னான். அவர்கள் அவரின் கல்லறையைத்திறந்து பார்த்த போது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
மனம் என்பது ஆறாம் அறிவாகச்சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும் போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத்தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire