samedi 7 février 2015

பத்து ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்திருக்கிறார்;சந்திரிகா!

கட்சியின் எதிர்ப்பை மீறி அதிபர் வேட்பாளராக நிறுத்திய என்னை ராஜபக்சே, தகாத வார்த்தையினால் பேசி கேவலப்படுத்தினார் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க பத்து ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்திருக்கிறார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சந்திரிகா அளித்த பேட்டியில், "நான் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அடுத்த அதிபர் வேட்பாளராக ராஜபக்சேவை நிறுத்தினேன். அப்போது இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் 61 பேரில் 56 பேர் ராஜபக்சேவை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சி தலைமைக்கு பொருத்தமற்றவர் எனவும் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை அதிபராக வேட்பாளராக நியமித்தோம். ஆனால் நான் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்காததை கூட அவர் பொருட்படுத்தாமல் அப்போதிருந்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டு, எனக்கு எதிராக மேடை பேச்சுக்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரணில் விக்ரமசிங்கவிடம், அவரது கட்சியிலுள்ள 23 முக்கிய உறுப்பினர்களை தான் பதவிக்கு வந்த பின்னர் தனது கட்சிக்கு அழைத்து கொள்கின்றேன் என வாக்குறுதியளித்திருந்தார். எனினும் அவரால் அந்த வாக்குறுதியை செயற்படுத்த முடியாமல் போன நிலையில், அவருக்கு மாத்திரம் தனது கட்சியில் இடங்கொடுத்தார். அவரின் இந்நடவடிக்கைகளை நான் அறிந்திருந்தும் பழைய விஷயங்களை பெரிதுபடுத்தக் கூடாது என்ற காரணத்தினால் அவர் அதிபராக பொறுப்பேற்றதன் பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் பேசினேன். அப்போது, அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்தார். நான் அமைதியாக அவர் கூறியவற்றையெல்லாம் கேட்டு விட்டு, குறிப்பிட்ட சிலர் மாத்திரமேயறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.

பின்னர் மகிந்த என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார். என்னை அரசின் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து என்னை மிகவும் கேவலப்படுத்தினார். எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது. இந்நிலையில் கடந்த கடந்த 9 வருடங்களாக அவர் நடத்திய அரசியல் சீரழிவுகளை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப்பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.

எனினும் மீண்டும் ஒருமுறை நான் அரசியலுக்கு வர விரும்பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மானித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தேன்" என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire