mardi 31 mars 2015

2006ல், தமிழ் அரசியல்வாதி கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் கைது

இலங்கையில், 2006ல், தமிழ் அரசியல்வாதி கொல்லப்பட்டது தொடர்பாக, இரண்டு அதிகாரிகள் உட்பட, கடற்படையைச் சேர்ந்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த, 2006ல், இலங்கையில் ராஜபக் ஷே அதிபராக இருந்தபோது, பிரபலமான தமிழ் அரசியல்வாதியான நடராஜா ரவிராஜ், 44, என்பவர், தன் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாவலரான போலீஸ் அதிகாரியும் பலியானார். தமிழ் தேசிய கூட்டணியின் பிரபலமான தலைவரான ரவிராஜ், எம்.பி.,யாகவும் இருந்தார். யாழ்ப்பாணம் நகர முன்னாள் மேயர் மற்றும் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில், ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, வெளிப்படையாக சில கருத்துக்களைத் தெரிவித்தவர். இவரது படுகொலை, மனித உரிமை மீறல் என, பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தப் படுகொலை தொடர்பாக, இலங்கை போலீஸ் தகவல் தொடர்பாளர் ருவான் குணசேகரா கூறியதாவது: ரவிராஜ் படுகொலை தொடர்பாக, அதிகாரிகள் இருவர் உட்பட, இலங்கை கடற்படையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று பேரும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன், இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டது மற்றும் காணாமல் போனது தொடர்பாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு, ருவான் குணசேகரா கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire