lundi 9 mars 2015

நீதி செத்துப்போன நாடொன்றில் இறுதியாகக் கேட்கப்பட்ட கேள்வி. யாரிடமும் பதிலில்லை.ஈழத்திலும் கூட்டு பாலியல் வன்புணர்வு

விசேட ஆக்கம் கொழும்பு மிரருக்காக ஜெரா
Rape1இலங்கையின் பிரமாண்ட சாலைகளில் சரித்திர முக்கியமானது ஏ-9. கண்டியிலிருந்து தொடங்கி யாழ்ப்பாணத்தில் முடிகிறது. அதன் பயணத்தில் சிங்கள, முஸ்லிம், தமிழ் பண்பாடுகள் கடந்துபோகும். இது 24 மணிநேரமும் இயங்கக்கூடியது. வாகன ஓட்டங்களால் கலகலப்பானது.

வளைவுகள் குறைந்த இந்தச் சாலையில் மேடுகளும், பள்ளங்களும், பற்றைக் காடுகளும், அடர்காடுகளும் அதிகம். வன்னியை ஏ–9 சாலை குறுக்கிடுகையில் காடுகளும், பற்றைக்காடுகளும், குடிமனைகளும், சிறுநகரங்களும் மாறிமாறிவரும்.
அப்படி வன்னிக்குள்ளால் குறுக்கிட்டுப் பயணிக்கும் ஏ-9 சாலையின் ஓரத்தில் கனகராயன்குளம்- மாங்குளம் சிறுநகரங்களுக்கு இடையில் உள்ளது மன்னகுளம். இங்குதான் கூட்டு பாலியல் வன்புணர்வொன்று நடந்திருக்கிறது.
கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாகும்போது சரண்யாவுக்கு வயது 16. எனவே அவள் உச்சமான போர்க்காலத்தில் பிறந்தவள். ஏழு வயதைத் தொடுகையில் இவளின் தந்தையார் போரில் மரணமெய்திவிட்டார். தொடர்ந்து வந்த நாட்களில் தாயும் விபத்தொன்றில் இறந்துவிடுகிறார். இவளுடன் இணைந்த ஏனைய சகோதரர்கள் அனைவரையும் அம்மம்மா தத்தெடுத்துக்கொள்கிறார்.

Rape3இறுதிப் போர் முடிவுறும் வரையில் – முள்ளிவாய்க்கால் வரையில் வயதான அந்த மூதாட்டியின் பாதுகாப்பிலேயே சரண்யா வளர்ந்தாள். போர் முடிந்தவுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த சரண்யாவும் சகோதரர்களும் மற்றும், அம்மம்மாவும் நிர்க்கதியாகின்றனர். அப்போதுதான் சரண்யாவை வவுனியாவில் இருக்கின்ற சிறுவர் பராமரிப்பு நிலையமொன்று பொறுப்பெடுத்துக்கொள்கின்றது.
வன்னி மக்கள் மீள்குடியேறி சில வருடங்கள் வரை அவள் அந்த சிறுவர் இல்லத்திலேயே வளர்ந்தாள். அங்கேயே கற்றாள். கெட்டிக்காரியாக வளர்ந்தாள். ஊர் நிலமைகள் வழமைக்குத் திரும்ப அம்மம்மாவிடமே திரும்பிவிடுகிறாள் சரண்யா. அருகிலிருக்கும் பாடசாலையில் படிக்கத்தொடங்கினாள். அந்த மூதாட்டி தன் உடலை வருத்திக் கூலி வேலையும், வீட்டு வேலைகளும் செய்தே சரண்யாவைப் பார்த்து வந்தார். இப்படியே காலம் கடக்கையில்தான் அவள் 16 வயதைத் தொட்டாள். கடந்த வாரத்துக்கு சில நாட்கள் முன்பு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் திருவிழா வந்தது. அந்தத் திருவிழாவுக்கு தன் உறவுக்காரர்களுடன் சென்றாள். திருவிழா முடிந்து ஊர் திரும்பிய சரண்யா அம்மம்மாவின் வீட்டு வரவில்லை. உறவுக்காரரின் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.

“சரண்யாவின் படிப்பறை”
Rape2அம்மம்மா என்கிற மூதாட்டி வீட்டில் இல்லாத தருணம் பார்த்து புத்தகங்களையும், தன் உடைகளையும் எடுத்துப்போய்விட்டாள். திருவிழா போய் வந்து சில நாட்கள் பாடசாலையும் போகவில்லை. சிலநாட்கள் கழித்து பாடசாலை சென்றாள். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குகொண்டாள். அன்றைய தினம் இரவு ஏதோ இனந்தெரியாத நோயொன்று அவளைத் தாக்கியுள்ளதாக உறவினர் சந்தேகப்பட்டனர். மயக்கமடைந்திருந்தாள். அவளை மாங்குளம் மருத்துவமனையில் அவர்கள் அனுமதித்தனர்.
உடனடியாகவே அவளைப் பாதுகாத்த மூதாட்டிக்கு அறிவித்தனர். அவரும் பதறியடித்துக்கொண்டு மாங்குள மருத்துவமனைக்கு ஓடினார். சரண்யாவுக்கு மனநோய் எனத் தெரிவித்ததோடு, மல்லாவி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டதாக மாங்குளத்தில் சொல்லியிருக்கின்றனர். மல்லாவிக்கு ஓடினார் அந்த வறிய மூதாட்டி. மல்லாவியில், கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டதாக சொன்னார்கள். கிளிநொச்சிக்கு ஓடினார். கிளிநொச்சி மருத்துவமனையில் விசாரித்தார். அப்படி யாரும் வரவேயில்லை என்றுவிட்டனர்.
மீண்டும் மாங்குளத்துக்குப் போனார். கிளிநொச்சி மருத்துவமனையில் 10 ஆம் இல்ல விடுதியில் அனுமதிக்கப்பட்டதாக அப்போது மாங்குளத்தில் சொன்னார்கள். மீண்டும் கிளிநொச்சிக்கு வந்தார் மூதாட்டி. 10 ஆம் இலக்க விடுதிக்கு ஓடினார். அங்கு சரண்யா படுத்திருந்த கட்டில் தனியாகக் கிடந்தது. இப்போதுதான் மையவார்ட்டுக்கு எடுத்துப் போகிறார்கள் என்றனர் அயல் கட்டில்காரர்கள். சரண்யா தன் அம்மம்மாவைப் பார்க்காமலே கடந்த செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டாள்.

“மனநோயாளியான சரண்யா வகுப்பில் கற்றவை”
Rape4அலறியடித்த அம்மம்மாவை மரணங்களுடன் தொடர்புடைய மருத்துவ அதிகாரி தன் அறையில் சந்தித்தார். பூட்டப்பட்ட அறைக்குள் மூதாட்டியும், பொலிஸ் உறுப்பினர் ஒருவரும் அந்த அதிகாரியை சந்தித்தனர். “மூன்றுக்கு மேற்பட்டவர்களால் பிள்ளையின் மல வாசல் வழியாவும், மர்ம உறுப்பு வழியாகவும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கு” – தமிழிலும், சிங்களத்திலும் அந்த மருத்துவர் தங்களிடம் கூறியதாக அம்மம்மா எங்களிடம் கண்ணீரோடு சொல்கிறார்.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானவுடன், நேற்றைய தினம் பொலிஸார் அவரின் வீட்டுக்கு சென்றனர். சரண்யா மனநோயின் காரணமாகவே இறந்தாள் எனவும், வயதான மூதாட்டி பணத்தை வாங்கிக்கொண்டு மானபங்கப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறையிடப்படுவார் எனவும், அப்படி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படவில்லையென அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் மிரட்டிச் சென்றிருக்கின்றனர்.
மருத்துவமனை கொடுத்த மரணச் சான்றிதழ் மனநோயின் காரணமாகவே சரண்யா இறந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அப்படித் தெரிவித்த பொலிஸாரில் ஒருவர், முந்தைய தினம் மருத்துவர் சரண்யா கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலமே மரணமடைந்தார் என்று கூறும்போது அருகில் நின்றவர். எனவே அவரை நோக்கி நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று மூதாட்டி சொல்ல, மூதாட்டியே பொய் சொல்வதாகவும், மருத்துவர் அப்பிடிசொல்லவேயில்லை எனவும் பொலிஸார் உடனடியாகவே மறுத்துவிட்டார்.
”என் சொந்தப் பேரப்பிள்ளையை ஊடகங்களில் அவமானப்படுத்துவேனா??” – நீதி செத்துப்போன நாடொன்றில் இறுதியாகக் கேட்கப்பட்ட கேள்வி. யாரிடமும் பதிலில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire