jeudi 1 janvier 2015

தமிழர்களை யார் பாதுகப்பது ?இனக்கொலைப் போரை வழிநடத்தியவர் சரத் பொன்சேக்கா. : வேல் தர்மா

ranil_maythiry_chandrika_sarathமைத்திரிபால சிரிசேனவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அவர்களின் எஜமானர்களால் செய்யப்பட்டது. அதை வாலாட்டிக் கொண்டு த.தே. கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது செய்த படுகொலைகள்:
1983 வெலிகடைச் சிறைச்சாலைப் படுகொலை
1985 வல்வை நூலகப் படுகொலை
1985 குமுதினிப் படுகொலை
1985 மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை
1986 அம்பாறை உடும்பன் குளம் படுகொலை
1987 கொக்கட்டிச் சோலை படுகொலை
1990 வீரமுனைப் படுகொலை
1990 சத்துருக் கொண்டான் படுகொலை
1993 கிளாலிப் பயணிகள் படுகொலை
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆட்சியில் இருக்கும் போது செய்த படுகொலைகள்:
1995 நாகர்கோவில் சிறுவர் படுகொலை
1995 நவாலி தேவாலயப்படுகொலை
1997 களுத்துறை சிறைச்சாலைப் படுகொலை
2000 பிந்துணுவேவா படுகொலை
இனக்கொலைப் போரை வழிநடத்தியவர் சரத் பொன்சேக்கா.
மைத்திரிபால சிரிசேன இறுதிப் போரின்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். போரின் கடைசி மூன்று நாட்களில் பாதூகாப்பு அமைச்சர் பொறுப்பிலும் இருந்த மஹிந்த ராஜபக்ச ஜோர்தான் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதனால் போரை முடித்து வைத்தவன் நான் எனப் பெருமை அடித்துக் கொள்கின்றார் மைத்திரிபால சிரிசேன. அதனால் சரணடையைச் சென்றவர்களைக் கொன்ற பொறுப்பு மைத்திரிபால சிரிசேனாவினுடையது. இலங்கைப் படையினர் அப்பாவிகளைக் கொல்லவில்லை பயங்கரவாதிகளைத்தான் கொன்றது என மஹிந்த சொல்வதை மைத்திரி மறுப்பாரா?
இந்த நான்கு கொலையாளிகளின் கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கின்றது.
மைத்திரிபால சிரிசேனவிற்குவாக்களிக்கும்படி அறிக்கை விட்ட கூட்டமைப்பு கொடுக்கும் காரணங்கள் எதுவும் தமிழ் மக்கள் நலன் சார்ந்தவையாக இல்லை. அது இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலையில் இருந்து மாறி சிங்கள தேசக் கூட்டமைப்பாக மாறிவிட்டது.
த. தே. கூட்டமைப்பு மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு கொடுப்பதற்கு காட்டும் காரணங்கள்:
1. நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதாம்.
ஐயாக்களே கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழ் மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியைத் தான் நடாத்துவர்கள். 1970இல் இருந்து நீங்கள் அதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
2. நிறைவேற்று அதிகாரமுள்ள குடியரசுத் தலைவரின் கீழ் நீதித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் நீதித்துறை என்றும் தமிழர்களுக்கு எதிராகத் தான் இருக்கும். கொதிதாரில் குழந்தையையும் வேதியனையும் போட்டுக் கொன்றவர்களை இலங்கையின் நீதித் துறை தண்டிக்கவில்லை. அப்போது நிறைவேற்று அதிகாரமுள்ளவர்கள் இருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சி முறைமையை மைத்திரிபால நீக்குவது நிச்சயமா? அகற்றியபின் இனக்கொலையாளிகளைத் தண்டிப்பார்களா? சிறைக்குள் வைத்து கொல்லப்பட்ட தமிழர்களை உங்களால் நீதி மன்றம் கொ்ண்டு செல்ல முடியுமா?
3. ராஜபக்ச அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது.
எப்போது இருந்து ஐயா இலங்கைப் பாராளமன்றம் உங்களுடையதானது? தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சட்டத்தையும் தன் வரலாற்றில் நிறைவேற்றாத இலங்கைப் பாராளமன்றம் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன? அது நிறைவேற்றிய 13வது திருத்தத்திற்கு என்ன நடக்கிறது?
4. 17வது திருத்தத்தின் பின்னர் அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்கள் நேர்மையாக இல்லை.
17வது திருத்தத்தின் முன்னர் உள்ள நீதித் துறைதான் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது செய்யப் பட்ட கொலைகளை நியாயப்படுத்தியது. செம்மணிக் கொலையாளிகளைத் தண்டிக்காமல் விட்டது. பல்வேறு இனக்கலவரங்கள் செய்த எவரையும் தண்டிக்காமல் விட்டது.
5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது
முன்பு தலைமை அமைச்சர் நாட்டை ஆண்டபோது எல்லாம் நல்லபடியாக நடந்ததா?
பாருங்களய்யா இந்தப் பட்டியலை:
டி. எஸ் சேனநாயக்க
கிழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல் ஓயாத் திட்டத்தை ஆரம்பித்தார். இது ஈழத் தமிழர் வரலாற்றில் முதலாவது பெரிய நில அபகரிப்பாகும்.
ஜோன் கொத்தலாவல
சிங்களத்திற்கும் தமிழிற்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படும் என்று கொக்குவிலில் பிரகடனப்படுத்தினார். பின்னர் அதை நிறைவேற்றவில்லை.
நேரு கொத்லாவல ஒப்பத்தந்தின் மூலம் மலையகத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் குடியுரிமை பெறத் தகமையற்ற தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க மறுத்தது
India agreed to the repatriation of any Indian Tamil who wanted Indian citizenship. But India refused to automatically provide Indian citizenship to those who did not qualify for Ceylon citizenship
1956-இல் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற பரப்புரையால் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வாக்கு வேட்டையாடி ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா தமிழர்களின் தீவிர எதிர்ப்பினால் தந்தை செல்வாவுடன் பண்டா-செல்வா ஒப்பந்தம் செய்து கொண்டார். பின்னர் பிக்குகளினதும் ஜே ஆர் ஜயவர்தனவினதும் கடும் எதிர்ப்பால் அதைக் கைவிட்டார்
சிறிமாவும் தந்தை செல்வாவும் இணைந்து ஆட்சி அமைக்க ஆளுனர் அனுமதி அளிக்கவில்லை.
பண்டா-செல்வா ஒப்பந்த அடிப்படையில் சிறிமாவும் தந்தை செல்வாவுக் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். 1960 ஜூலைதேர்தலில் சிறிமாவின் சுதந்திரக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால். தந்தை செல்வாவிற்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை சிறிமா காற்றில் பறக்க விட்டார்.
1961இல் தமிழ் மக்கள் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தனர். வடக்குக் கிழக்கில் அரசு செயற்பட முடியாத நிலை ஏற்பட்டது. தபால் சேவை இல்லாமையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழர்கள் தமது தபால் சேவையை ஆரம்பித்தனர். தமக்கெனத் தபால் முத்திரைகளை அடித்தனர். அடுத்த கட்டம் தமிழர்களுக்கு என நாணயம் அச்சிட திட்டமிடப்பட்டது.
1965-இல் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறவில்லை. தமிழரசுக் கட்சி ஆதரிப்பவர் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை. டட்லி செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வடக்குக் கிழக்கில் மாவட்ட சபை அமைப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. சிங்களவர்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. அரசில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.
1970இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமா புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றினார். தமிழர்களின் கோரிக்கைகள் எதுவும் அதில் உள்ளடக்கபடவில்லை. தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழக அனுமதியில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழாராய்ச்சி மாநாடு குழப்பப்பட்டு பார்வையாளராக வந்த பதினொரு பேர் கொல்லப்பட்டானர். தமிழ் இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கப்பட்டனர்.
1977இல் ஆட்சிக்கு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் பெரும் இனக்கலவரத்துடன் தனது ஆட்சியை ஆரம்பித்தார். போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம் என்னும் கூச்சலுடன் பெரும் இனக்கொலை நடந்தது.
உங்கள் அறிக்கை இப்படி முடிகிறது:-
எனவே சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும், நமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.
சிங்கள அதிகாரவர்க்கத்தின் நாட்டைப் பாதுகாக்க மைத்திரிக்கு வாக்களிக்கச் சொல்கின்றீர்களா? தமிழர்களை யார் பாதுகப்பது? சுப்பிரமணிய சுவாமியா?

Aucun commentaire:

Enregistrer un commentaire