mardi 20 octobre 2015

இலங்கை அரசு நியாயமானதொரு அரசியல் தீர்வவை மக்களுக்கு வழங்கப்படவேண்டும்

நியாயமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றும் இதுபற்றி சர்வகட்சிக் குழுக் கூட்டத்திலும் எடுத்துரைக்கப்படும் என்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இதில் பங்கேற்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சில கட்சிகள் இன்னும் இறுதிமுடிவை எடுக்கவில்லை.இந்நிலையில், லங்கா சமசமாஜக் கட்சியின் பங்குபற்றல் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போது, "சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் எமது கட்சி பங்கேற்கும். தேவையான யோசனைகளையும் நாம் முன்வைப்போம். மற்றுமொரு விடயத்தையும் இவ்விடத்தில் கூறவேண்டியுள்ளது.ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழர் விடயத்தில் சமசமாஜக் கட்சியின் கொள்கை மாறிவிட்டதாக சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறான வதந்திகளை நம்பவேண்டாம் என நாம் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று அன்றிலிருந்து இன்றுவரை நாம் வலியுறுத்தி வருகிறோம். இது விடயத்தில் எமது கொள்கையில் என்றுமே மாற்றம்வராது.எதிர்க்கட்சியில் இருந்தாலும் தமிழ் மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலிக்கும். சர்வக்கட்சிக் குழுக் கூட்டத்திலும் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டியதன் அவசியத்துவத்தை வலியுறுத்துவோம் '' - என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire