mercredi 26 août 2015

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் விபத்து 11 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.

கொச்சி துறைமுகத்தில் இருந்து வியாபின் பகுதிக்கு கொச்சி மாநகராட்சி பயணிகள் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. நேற்று கொச்சி துறைமுகத்தை நோக்கி பயணிகள் படகு கடல் முகத்துவாரம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த படகில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது வேகமாக வந்த மீன் பிடி படகுடன் பயணிகள் படகு பயங்கரமாக மோதியது. இதில் பயணிகள் படகு 2 துண்டாக உடைந்து கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் 3 பெண்கள் உள்பட 8 பேரின் பிணங்களை மீட்டதாக தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் மறுக்கவில்லை. இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல் படையினர், நீச்சல் வீரர்கள், கடலோர கப்பல்கள், கடலோர ரோந்து படையினர் மற்றும் துறைமுக மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 5 கடலோர கப்பல்கள் உள்பட 11 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.

மீட்பு பணியினர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 20 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும் மேலும் பல பயணிகள் காணாமல் போனதாக தெரியவருகிறது.

கொச்சி படகில் பயணம் செய்ய 25 பேருக்கு மட்டுமே டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு இருந்ததாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. ஆனால் அந்த படகில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire