jeudi 2 juillet 2015

80.காலப்பகுதியில் எமது ஆதரவாளர்கள் டயர்களில் எரிக்கப்பட்டார்கள். சிறை சென்றார்கள்.94 இல் நான் மனிதத்தன்மையை கொண்டுவந்தேன்; சந்திரிகா

chandrika-kumaratunga3எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் நாட்டின் நன்மைக்காக எந்த மோதலையும் நாம் எதிர்கொள்வோமென சூளுரைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நீதிமுறைமை சரியாக செயற்பட்டால் பிரதமர் பதவிக்கு வலியுறுத்தல் விடுக்கும் சில ஆட்கள் இப்போது சிறையிலிடப்படவேண்டியவர்கள் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியங்கள் கடந்த 10 வருடங்களாக தவறான வழியில் சென்றதை ஏனைய கட்சிகளுடனும் அமைப்புக்களுடனும் இணைந்து சரியான வழிக்குக்கொண்டு வந்து யுகமாற்றத்தை ஏற்படுத்தினோம்.அட்டைகள் போல் மக்களின் இரத்தங்களைக் குடித்துக்கொண்டிருந்த தலைவர்களை மக்கள் கிளர்ந்தெழுந்து வீட்டுக்கனுப்பி பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பாகும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.முன்னாள் மாநகர சபை உறுப்பினர் லலித்டென்சில் பெர்னாண்டோவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பிறந்த தின வைபவம் நீர்கொழும்பு மாநகர மண்டபத்தில் இடம்பெற்றது.இங்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு ஆசிர்வதித்து டொக்பொஸ்கோ நிறுவன பணிப்பாளர் பிதா பின்டோ ஆசிர்வாதம் செய்தார். 70 வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே மாகாண சபை உறுப்பினர் லலித் வணிகரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிமல் குறேரா உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தொடர்ந்து உரையாற்றுகையில்;நான் 13 வருடங்கள் ஸ்ரீ.ல.சு.க. தலைமையில் இருந்துள்ளேன். எனது தாயாரின் காலத்தில் உத்தியோகப்பற்றற்ற முறையிலும் பின்னர் உத்தியோகபூர்வமாகவும் தலைமை வகித்தேன். இக் கட்சியில் 5 பேர் தலைமைத்துவத்தில் இருந்துள்ளனர்.
மைத்திரி உட்பட 4 பேர் கட்சியின் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக நடத்திக்காட்டினார்கள். கட்சி அல்லது அமைப்புக்கள், நிறுவனங்களின் தலைமைத்துவத்தை ஏற்பவர்கள் அந்த நிறுவனத்தை நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்லவேண்டும். முன்னைய தலைவர்கள் பிரதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் தமது பணத்தை செலவழித்து பிச்சைக்காரர்களாக மாறினார்கள்.நாட்டின் வளங்களை களவாடும், சூறையாடுவோர் தலைமைத்துவத்தை ஏற்கமுடியாது. ஸ்ரீ.ல.சு.க. பொதுமக்களின் கட்சி. பொதுமக்களுக்காக சேவை செய்த கட்சி 1956 பின் ஸ்ரீ.ல.சு.க.  ஜனநாயக கட்சியாக மக்களின் சுதந்திரத்தை, மனித உரிமைகளை நிலைநாட்டிய கட்சி. அண்மைக்காலத்தை தவிர எமது கட்சி கட்சி நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வழிநடத்தப்பட்டுள்ளன.
மது எதிரிகள் எம்மை பல வருடங்களாக அடித்து துன்புறுத்தினார்கள். 80 காலப்பகுதியில் எமது ஆதரவாளர்கள் டயர்களில் எரிக்கப்பட்டார்கள். சிறை சென்றார்கள். 94 இல் நான் மனிதத்தன்மையை கொண்டுவந்தேன்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியங்கள் கடந்த 10 வருடங்களாக தவறான வழியில் சென்றதை ஏனைய கட்சி மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சரியான வழிக்குக் கொண்டுவந்து யுகமாற்றத்தை ஏற்படுத்தினோம்.சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாததினாலும் நீதிமன்றங்கள் உரிய முறையில் இயங்காததினாலும் தவறு செய்த தலைவர்கள் சிறையில் இருக்காமல் அமைச்சுப் பதவிகளை கேட்கிறார்கள். தலைமைத்துவத்தை கேட்கிறார்கள். இவர்களை மீண்டும் தலைமைத்துவத்திற்கு வர இடமளிக்கக்கூடாது.தவறு செய்தவர்கள் எந்தத் தரத்தில் இருந்தாலும் வீட்டுக்கு செல்லவேண்டும்.நாட்டில் வாயை மூடி அமைதியாக இருக்கவேண்டும். சட்டத்தை மாற்றி மூன்றாவது முறையும் என்னை வரச்சொல்லியும் நான் முடியாது எனக் கூறினேன். வீட்டிற்குச் சென்று அவர்களின் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்தேன்.அரசின் தலைவராக இருந்துகொண்டு அட்டைகள் போல் மக்களின் இரத்தத்தை குடித்துக்கொண்டிருந்தவர்களை மக்கள் கிளர்ந்தெழுந்து வாக்களித்து வீட்டிற்கு அனுப்பினார்கள். இதன் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதும் மக்களின் பொறுப்பாகும். வெள்ளை வான் கலாசாரத்தை நிறுத்தியுள்ளோம்.ஆட்கடத்தல் இடம்பெறுவதில்லை. தற்போது அவர்கள் முதலில் வெட்டித்தின்னுவது என்னைத்தான். அதற்கு நான் அஞ்சவில்லை. இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். நான் இருமுறை மாற்றத்தை செய்தேன்.பிரேமதாஸ யுகத்தையும் மாற்றினோம்.நாம் இப்போது முக்கிய சந்தியில் இருக்கிறோம். கட்சி, இன, மத, பேதமின்றி ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் தேவையாகும். எந்த அரச நிறுவனத்திலும் எனது பெயர் பலகையையோ, கட்டவுட்களையோ போட நான் இடமளிக்கவில்லை.1998 இல் கல்வி அபிவிருத்தியை ஆரம்பித்து உலகின் சிறந்த கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தேன். தற்போது கல்வித்திட்டம் சரிந்து விழுந்துள்ளது.சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக சிறுவர் பாதுகாப்புப் பிரிவை ஆரம்பித்து ஐ.நா. சபையின் பாராட்டைப் பெற்றேன். தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துக் காணப்படுகின்றது.ஆசிரியர்கள் தற்போது வகுப்பறையில் கற்பிப்பதில்லை. ரியூசன் வகுப்புகளுக்கு வரச் சொல்கிறார்கள் .நான் நவீன முறையில் கல்வி போதிப்பதற்காக 88 பயிற்சி நிலையங்களை ஆரம்பித்தேன். பிரதேச செயலக மட்டத்தில் 350 நவோதய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.சிறந்த அதிபர்களை நியமித்தேன். தற்போது அதிபர்கள், அமைச்சர்களை சந்தித்து நகர்புறங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர்.நான் தற்போது முதுமையை அடைந்துகொண்டு செல்கிறேன். இளைஞர்களுக்கும் பொறுப்புக்களை ஒப்படைப்போம் எனக் கூறினார். பிரதியமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயும் இங்கு உரையாற்றினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire