mercredi 22 août 2012

ஏற்கத்தக்கவையா?......கூட்டமைப்புக் கூடாரத்துக்குள் ஓடிப்போகிறவர்கள் சொல்லும் நியாயங்கள்


வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
TNA Electionஇலங்கையில் நடைபெற்று முடிந்த 30 வருடப்போரில் அரச இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் தொகைக்குச் சமதையாக பாசிசப் புலிகளும் தமிழ் மக்களைக் கொலை செய்துள்ளார்கள் என்று சொன்னால், அதில் தவறேதும் இருக்க முடியாது. போதாக்குறைக்கு அரச இராணுவம் செய்யாத ஒரு வேலையை, அதாவது முஸ்லீம் மக்களை அவர்களது பள்ளிவாசல்களிலும், கிராமங்களிலும் வைத்துக் கொலை செய்ததுடன், வடக்கில் வாழ்ந்த அவர்களை 2 மணி அவகாசத்தில் விரட்டியும் அடித்தார்கள்.

அதேவேளை அரச இராணுவத்துடனான போரில் இறந்த புலிகளல்லாத மாற்று இயக்கப் போராளிகளின் எண்ணிக்கையைவிட, புலிகளால் கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகம். அதனால் இந்த மாற்று இயக்கங்கள் ஆரம்பத்தில் எந்த சிங்களப் பேரினவாத அரசுக்கெதிராக போராடப் புறப்பட்டனவோ, அதே அரசிடமே புலிகளுக்குப் பயந்து பாதுகாப்புக் கோரவேண்டிய நிலைக்கு ஆளானார்கள். குறிப்பாக தமிழர் விடுதலைக்கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத் தலைவர்களும் தொண்டர்களும் கொழும்புக்குச் சென்று அரச பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள்.

தமிழர் விடுதலைக்கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புகளை அரசாங்கம் உதாசீனம் செய்யாது, பாதுகாப்பான இருப்பிடம், நிதி, பாதுகாப்பு என எல்லாவற்றையும் வழங்கியது. அதற்குக் கைமாறாக, புலிகளுக்கெதிரான போரில் அரச இராணுவத்துடன் இணைந்து போராடும்படி கூட அரசு அவர்களை நிர்ப்பந்திக்கவில்லை. கொழும்பில் அரச பாதுகாப்புடன் இருந்துகொண்டு, தங்களது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர அரசு பூரண சுதந்திரம் வழங்கியது. அன்று அரசு இவர்களைப் பாதுகாக்காமல் ஏனோதானோ என்று விட்டிருந்தால், புலிகள் இவர்களைக் கண்டபாட்டுக்குப் ‘போட்டு’த் தள்ளியிருப்பார்கள்.

இந்த மாற்று இயக்கங்களை புலிகள் ஓட ஓட விரட்டி நாயைச் சுடுவது போலச் சுட்ட நேரங்களில், புலிகளின் பினாமி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இதில் தமிழரசுக்கட்சி,  தமிழ் காங்கிரஸ், ரெலோ, சுரேஸ் பிரேமச்சந்திரனின் கட்சி அடக்கம்) வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. இவையெல்லாம் நடந்தது 2009 மே மாதம் புலிகளை அரசாங்கம் அழிக்கும் வரைதான். அதற்குப் பிறகு ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்பது போலக் காட்சிகள் மாறத்தொடங்கின.

புலிகள் ஒழிந்த பின்பு ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மக்கள் TNA Leaders with otherமத்தியில் தலையைக் காட்டத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அரசாங்கம் வழங்கிய தாராள ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி அங்கு நுழைந்து அரசியல் செய்யத் தொடங்கினர். வரலாற்றுத் தவறுகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு ஏதாவது ஆக்கபூர்வமான அரசியலைச் செய்தார்கள் என்றால் அதுதான் இல்லை. பழையபடி மக்களுக்கு இனவாத விசமேற்றி, அவர்களை வெறியர்களாக்கித் தமது பழைய அரசியலையே மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல்களில் நல்ல அறுவடையையும் பெற்றுக்கொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது இந்த அடாவடித்தனமான பிற்போக்கு இனவாத அரசியலைக் கண்டு பொறுக்காத மாற்றுத் தமிழ் அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற ஜனநாயகபூர்வமான அமைப்பை உருவாக்கினர். உண்மையில் அந்த அரங்கத்தின் உருவாக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெலவெலக்க வைத்துவிட்டது. எனவே சதித்திட்டம் தீட்டி, தமது கையாட்களான மனோ கணேசன், எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றோரை அதற்குள் நுழைத்து, தமிழ் கட்சிகளின் அரங்கைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டனர்.

பிறகு என்ன, தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இருந்த கட்சிகளை ஒவ்வொன்றாகத் தமது பக்கம் இழுக்கத் தொடங்கினர். முதலில் ஆனந்தசங்கரியை இழுத்தார்கள், பின்னர் சித்தார்த்தனை இழுத்தார்கள். இப்பொழுது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் மட்டக்களப்புப் பொறுப்பாளர் துரைரத்தினத்தையும் அவரது ஆதரவாளர்களையும் இழுத்தெடுத்துள்ளார்கள். இப்பொழுது அந்தக் கட்சியின் தலைமையும் அந்தப்பக்கம் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மிச்சமாக இருப்பது ‘துரோகி’ டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈ.பி.டி.பி கட்சியும் மட்டுமே. டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அந்த மக்கள் விரோத அணியுடன் போகமாட்டார் என நம்புவோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூடாரத்துக்குள் ஓடிச் சென்றவர்கள், தமது இயக்கத்தின் தலைவர்களையும் ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய புலிகள் படுகொலை செய்து இரத்த வெறியாட்டம் ஆடியதை, ஒருகணம் தன்னும் சிந்தித்துப் பார்த்தார்களோ என்பதை நினைக்க ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. உலகில் எந்த இனத்திலும் இல்லாத இந்த வகையான கேடுகெட்ட அயோக்கியத்தனங்கள், இலங்கைத் தமிழர்களிடம் மட்டுமே தொடர்ச்சியாகவும் சகஜமாகவும் நடந்தேறுவதை நினைக்க, இதற்காகத்தான் நம் முன்னோர்கள், ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று சொல்லிச் சென்றார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

இப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூடாரத்துக்கு ஓடிப்போனவர்கள் ஆளுக்கொரு நியாயம் சொல்கிறார்கள். அதில் இரண்டு நியாயங்கள் முக்கியமானவை. ஒருசாரார் தமிழ் மக்கள் எல்லோரும் ஓரணியில் திரண்டு நின்று போராட வேண்டும் என்பதற்காகவே தாம் தமிழ் கூட்டமைப்பில் சேர்ந்ததாகச் சொல்கிறார்கள். அநேகமானோர் சொல்லும் காரணம் இது. இன்னும் சிலர் பதவி கிடைத்தால்தான் மக்களுக்கு ஏதாவது செய்யலாம். புதவி கிடைப்பதானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்தால்தான் கிடைக்கும் என்று காரணம் சொல்கிறார்கள். இந்த நியாயங்கள் இரண்டும் சரியானவைதானா என்பதைச் சற்றுப் பார்ப்போம்.

TNA slதமிழ் காங்கிரஸ் கட்சியே இலங்கைத் தமிழர்களின் மூத்த அரசியல் கட்சியாகும். படுபிற்போக்குவாதியும் சாதித்திமிர் பிடித்தவருமான ஜீ.ஜீ.பொன்னம்பலமே அக்கட்சியின் தலைவர். தமிழ் மக்கள் மத்தியில் சுதந்திர உணர்வையும், ஏகாதிபத்திய – நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும் முன்னிறுத்திய, பல படித்த கல்விமான்களை உள்ளடக்கியிருந்த யாழ்ப்பாண மாணவர் – வாலிபர் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தைத் தலைதூக்கவிடாமல் செய்துவிட்டு, இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டதே தமிழ் காங்கிரஸ் கட்சி. பின்னர் அதிலிருந்து பிரிந்து 1949ல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உருவாக்கிய தமிழரசுக்கட்சியும் சாராம்சத்தில் தமிழ் காங்கிரசின் அச்சுப் பிரதியாகவே செயல்பட்டது.

ஆனால் கிரிமினல் அப்புகாத்துக்களினதும், சிவில் அப்புகாத்துக்களினதும் இந்த இரு கட்சிகளும் தமிழ் மக்களின் நலன்களைவிட தமது தனிப்பட்ட நலன்களை முதன்மைப்படுத்தியதால், தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கப்பட்டு 1976ல் வட்டுக்கோட்டையில் மாநாடு நடாத்தி தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றும்வரை, கீரியும் பாம்புமாகவே செயல்பட்டு வந்தன. தமிழர் விடுதலைக்கூட்டணி கூட பெயரளவில் தமிழ் கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்பட்டதே தவிர, நடைமுறையில் அவ்வாறு இருக்கவில்லை.

அதில் இணைக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் மலையக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழீழத் தீர்மானம் எடுத்தவுடனேயே தமிழர் விடுதலைக்கூட்டணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டது. ஐக்கிய தேசியக்கட்சி வழங்கிய பதவியை ஏற்று, தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான கே.டபிள்யூ.தேவநாயகமும் விடுதலைக்கூட்டணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஜீ.ஜீ.பொன்னம்பலம் தான் உயிரோடு இருந்தகாலத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணிக் கூட்டங்கள் எதிலும் ஒருமுறைதானும் பங்குபற்றியது கிடையாது. அவர் இறந்தபோது அவரது சடலத்தைத்தான் யாழ்.பிரதான வீதியிலிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணிக் காரியாலயத்தில் சிறிது நேரம் வைக்க முடிந்தது. சாராம்சத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பது தமிழரசுக்கட்சியின் இன்னொரு வடிவமே.

இருந்தும் தமிழீழத் தீர்மானத்தை முன்வைத்து 1977 பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் 18 தொகுதிகளை வென்று, இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக்கூட்டணி வந்தது. இன்றைய காலத்தைவிட அன்றைய தமிழ்த் தலைமை மிகவும் வலுவாக மக்கள் மத்தியிலும், பாராளுமன்றத்திலும் இருந்தும், அதனால் எதையுமே சாதிக்க முடியவில்லை. சாதித்ததெல்லாம் அப்பாவித் தமிழ் இளைஞர்களைத் தமது சுய இலாபத்துக்காகத் தூண்டிவிட்டு அவர்களுக்கும், முழுத் தமிழினத்துக்கும் 30 வருடங்களாகப் போரின் மூலம் பேரழிவைக் கொண்டு வந்ததுதான்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமைத்துவம் வலுவிழந்த பின்னர் பல்வேறு இளைஞர் இயக்கங்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது. ஆனால் அவர்கள் மத்தியிலும் ஒற்றுமை உருவாகாது சகோதரச்சண்டைகள் மூண்டு பல இளைஞாகள் அநியாயமாகப் பலியானார்கள். இறுதியில் புலிகள் மற்றைய இயக்கங்களை அழித்து தாமே தனிக்காட்டு ராஜாக்களாக முடி சூடிக்கொண்டார்கள். புலிகள் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ் படை எல்லாம் அமைத்து தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் போராடினாhகள். அந்த நேரத்தில் தமது நோக்கத்தை ஈடேற்றுவதற்காக பிற்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி, அன்றைய சந்திரிகா அரசாங்கம் முன்னெடுத்த இனப்பிரச்சினைக்கான முயற்சிகளை வெற்றிகரமாகக் குழப்பியடித்தார்கள்.

புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், புலிகளால் தமது பினாமி அமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெட்கம், மானம், ரோசம் எதுவுமின்றி பச்சை இனவாதம் கக்கியபடி தாம்தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என வலம் வருகிறது. இப்பொழுது அந்தச் சுத்துமாத்துக்காகத்தான் எஞ்சியிருக்கிற தமிழ் கட்சிகளையும் வளைத்துப்போட முயற்சிக்கிறார்கள். ஏற்கெனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கிற கட்சிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. அவர்களால் கூட்டமைப்பை ஒரு தனி அமைப்பாக இன்றுவரை பதிவு செய்ய முடியவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன் போன்றவர்கள் தன்னிச்சையாக விடுகின்ற அறிக்கைகளை நிறுத்த முடியவில்லை. ஏன் தலைவர் சம்பந்தனே தமது கட்சியினருடன் கலந்தாலோசிக்காமல் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து இலங்கையின் தேசியக்கொடியான சிங்கக்கொடியைத் தூக்கிப் பிடிக்கிறார்.

இந்த இலட்சணத்தில் இதுவரை காலமும் சிறிதாக இருந்தாலும் TNA EAST Eöectionஓரளவு கொள்கைப்பிடிப்புடன் செயற்பட்டு வந்த பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சியையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சீரழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக்கட்சி கடந்த காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பையும், அதன் வால்பிடியான ஐ.தே.கவையும் எதிர்த்து நின்ற கட்சி. இவர்கள் அந்தக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஏகாதிபத்திய சார்பான, ஐ.தே.கவுடன் கள்ளக்கூட்டு வைத்திருக்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்களுக்காக என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்? இறுதியில் தமிழ் கூட்டமைப்பின் கறிவேப்பிலையாகப் பயன்பட்ட பின்னர், முகமிழந்த மனிதர்களாக வெளியே தூக்கி வீசப்படுவாhகள். எனவே தமிழின ஒற்றுமைக்காகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேருகிறோம் என்றால், அது தம்மையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றும் கதையாகத்தான் முடியும்.

அடுத்தது இன்னொரு சாரார் சொல்லும், மக்களுக்குச் சேவை செய்யப் பதவி வேண்டும். பதவி பெறுவதானால் கூட்டமைப்புடன் சேர்ந்தால்தான் முடியும் என்ற வாதம். இந்த வாதம் எந்தவிதமான அர்த்தமும் இல்லாதது. தமிழ் தலைமைகள் இந்த 60 வருட வரலாற்றில,; தமிழ் மக்களுக்காக தமது பணத்திலோ அல்லது அரசாங்கத்தைக் கொண்டோ ஒரு மலசல கூடத்தைத்தன்னும் கட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் தமது பாராளுமன்றப் பதவிகளுக்குரிய சகல வரப்பிரசாதங்களையும், தமது உறவினர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். அதேநேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு எதுவித உதவியும் செய்துவிடாதபடி சதா எதிர்ப்பு அரசியலையே நடாத்தி வந்துள்ளனர். இப்படியானவர்களுடன் சேர்ந்து பாராளுமன்ற அல்லது மாகாணசபைப் பதவிகளைப் பெற்றாலும், அவர்களது எதிர்ப்பு அரசியல் காரணமாக இருக்கிற நன்மையும் இல்லாமல் போவதுதான் நடக்கும்.

உண்மையில் இந்தத் தமிழ் கட்சிகள் மக்களுக்கு ஏதாவது செய்ய எண்ணினால், அரசாங்கத்துடன் சேராவிட்டாலும் தந்திரோபாய ரீதியாகத்தன்னும் அரசாங்கத்துடன் அனுசரித்துப் போவதன் மூலமே எதையாவது செய்ய முடியும் என்பது ஒரு படிக்காத மனிதனுக்குக்கூட விளங்கும். அதேநேரத்தில் அரசாங்கம் பேரினவாத ரீதியில் செயற்படுகிறது என்றால், அதைத் தமக்குரிய முற்போக்கான வழியில,; ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களையும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள நியாயத்தை விரும்பும் மக்களையும் இணைத்துக்கொண்டு போராடலாம்தானே?

அதைவிடுத்து, சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, ஐ.தே.க பேரினவாதிகளுடன் கள்ளக்கூட்டு வைத்திருக்கிற இன்னொரு இனவாத தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது என்பது, ‘கண்களை விற்று சித்திரம் வாங்கிய’ கதையாகத்தான் இருக்கும்.

எனவே இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூடாரத்துக்குள் ஓடிப்போய் சேருபவர்கள் சொல்லும், தமிழின ஒற்றுமைக்காக, மக்களுக்குச் சேவை செய்யப் பதவி பெற, என்ற வாதங்கள் சுத்தப் பித்தலாட்டமே தவிர வேறொன்றும் இல்லை. உண்மையான விடயமென்னவென்றால், பதவிக்காகக் காத்திருந்து அலுத்து விரக்தியடைந்தவர்களும், தற்பொழுதுள்ள பதவியிலிருந்து மேலும் மேலே போக விரும்புபவர்களும், தமது கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களையும், சாதாரண பொதுமக்களையும் ஏமாற்றுவதற்காக இப்படியான வாதங்களை முன்வைக்கிறாhகள் என்பதே பட்டவர்த்தனமான உண்மையாகும்.

இந்த விடயத்தில் கட்சி உறுப்பினர்களும், மக்களும் ஏமாறாமல் பார்த்துக்கொள்வதே நேர்மையான சக்திகளின் தற்போதைய பணியாகும். நேர்மையானவர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள இன்னமும் கால அவகாசம் இருக்கின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire