lundi 6 octobre 2014

நோர்வே நாடு மறைமுகமாக பொதுபலசேனாவுக்கு நிதி வழங்கி வருகின்றது என சிரேஷ்ட ;அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

Tissa-Vitharanaநாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு பொதுபலசேனாவை ஊக்குவித்து தனதுநோக்கத்தை அடைய நோர்வே நாடு மறைமுகமாக பொதுபலசேனாவுக்கு நிதி வழங்கி வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுபலசேனா கட்சி மக்களுக்கிடையில் உள்ள இன ஐக்கியத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. தமிழ் மக்களிடம் சிநேகபூர்வமாக உள்ளது.

தற்போது தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜா பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்து தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். இனப்பிரச்சினையை தீர்க்க ஆதரவு வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம் பாதிக்கப்படுவது தமிழ் கூட்டமைப்பல்ல வட பகுதி தமிழ் மக்களே என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு வாக்கு அதிகரிப்புக்கான காரணம் மக்களின் பொருளாதாரப் பிரச்சினை, ஊழல் மோசடி, வீண்செலவுகள் போன்ற பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமை.

ஐ.தே.கட்சி என்னதான் கூறினாலும் அவர்களால் ஒருநாளும் ஆட்சிக்கு வர முடியாது.

அதேநேரம் இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும். என்பதில் லங்கா சமசமாஜ கட்சி உறுதியாக உள்ளது.

இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க மேற்குலக நாடுகள் மறைமுக முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த நாட்டில் ஐ.தே.கட்சியை ஆட்சியில் அமர்த்தி தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.

மேற்குலக நாடுகள் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற இந்நாட்டு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என மேலும் கூறினார்.
 ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் வேண்டாம்: இடதுசாரிகள் கோரிக்கை
அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு தீர்மானித்துள்ள ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2016 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு பதவியில் இருக்க முடியும். அத்தோடு மூன்றில் இரண்டு பலம் கொண்ட அரசாங்கமும் இருக்கிறது. இவ்வாறிருக்கையில் அவசரமாக ஜனாதிபதி தேர்தலொன்றிற்கு செல்லத் தேவையில்லையெனவும் அவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை கம்யூனிச கட்சியின் செயலாளர் சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர, லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடிய போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பலம் கொண்ட அரசாங்கமொன்று இருக்கிறது. அத்தோடு இரண்டு வருடம் பதவிக்காலம் உள்ளது. எனவே அந்த இரண்டு வருட காலத்தில் இரு வரவு - செலவுத் திட்டங்களை சமர்ப்பிக்க முடியும். எனவே அதனூடாக மக்களுக்கு நல்ல நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும். அதன் பின்னர் தேர்தலொன்றிற்கு செல்வதே சிறந்தது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire