jeudi 14 janvier 2016

காணாமல்போனவர் சனல் 4 வீடியோவில் கண்டுபிடித்த தாய் எனது மகனை தருமாறு உரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறார்

போர் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில், குண்டுகளுக்கு பலியாகாமல் உயிர் தப்பிய இளைஞர்கள் பலர், சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டனர். நீண்ட காலமாக அவர்களைப் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்தன. அந்த சம்பவத்தில் காணாமல்போன தன் மகன் திரும்பி வருவானா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய் ஒருவரின் உருக்கமான கடிதம் எனக்குக் கிடைத்தது. அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது காணாமல்போன புதல்வன் பற்றிய தகவல்களை இங்கே பிரசுரிக்கிறேன்.


(இடது பக்க மூலையில் இருப்பவர்) 
அண்மையில் யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்களை பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றன. அதில் சமூகமளித்த பல பெற்றோர், தமது பிள்ளைகள் எத்தகைய சந்தர்ப்பத்தில் எவ்வாறு காணாமல்போனார்கள் என்ற விபரங்களை தெரிவித்தார்கள். எனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பிய தாய், குறிப்பிட்ட விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியவில்லை. அவரது மகனின் கதை, இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. 
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில், பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கும். அதில் ஒரு காட்சி வாரும். அரை நிர்வாணமாக்கப் பட்ட நிலையில், சில இளைஞர்கள் மணலில் இருத்தி வைக்கப் பட்டிருப்பார்கள். அவர்களது கைகள் முதுகுப் புறமாக கட்டப் பட்டிருக்கும். அவர்களது பார்வைகள் வெறிச்சோடிப் போயிருக்கும். அருகில் இருந்த இராணுவத்தினர் பிற கைதிகளை சுட்டுக் கொல்லும் கொடிய நிகழ்வை கண்முன்னால் பார்ப்பது போன்றிருக்கும். இலங்கையின் இறுதிப்போரில் நடந்த போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் ஆதாரமாக அது உள்ளது.
சனல் 4 ஆவணப்படத்தில், உயிருடன் இருப்பதாக காட்டிய காட்சியில், தனது மகனைக் கண்டதாக இந்தத் தாய் என்னிடம் தெரிவித்தார். (இங்கேயுள்ள படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் அமர்ந்திருப்பவர்.) அந்த வீடியோவில் தனது மகனை இனம் காட்டும் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். 
சனல் 4 காட்டிய படியால் சிலநேரம் தனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என்ற நப்பாசையில் இந்தத் தகவல் வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றார். மேற்கொண்டு தேவையான விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான விசாரணைக்குழு முன்பு சாட்சியமளிக்க தயாராக உள்ளார்.
மல்லாவி மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த தம் மகன், இறுதி யுத்த காலகட்டத்தில் புலிகளால் கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்லப் பட்டதை பெற்றோர் கண்டுள்ளனர். இராணுவம் புதுமாத்தளன் வரை முன்னேறி வந்த போது, பெற்றோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றார்கள். ஆனால் காணமல்போன புதல்வனும் இன்னும் பல இளைஞர்களும் அவர்களோடு செல்ல முடியாத நிர்ப்பந்தத்தில் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர்.
முள்ளிவாய்க்காலில் காணாமல்போன மகன் பற்றிய விபரங்களை அவரது தாய் அனுப்பிய கடிதத்தில் உள்ள படியே இங்கே தருகின்றேன்:
"எனது மகன் புஸ்பராசா அஜிந்தன் இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் காணாமல்போயுள்ளார். இவரை 20.04.2009 கடைசியாகக் கண்டேன். எனது பிள்ளை மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரக் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தார். இவரது கையில் பட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், கடைசியில் மகன் விலங்கிடப் பட்ட நிலையில் உள்ள படத்தை தான் காண முடிந்தது.

இடது பக்க மூலையில் இருப்பவர் 

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் சில காட்சிகளை, 15.03.2013 யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அப்போது தான் எனது மகனும் அந்தப் படங்களில் இருப்பதை கண்டுபிடித்தேன். அப்போது பாதுகாப்பின்மை காரணமாக அடையாளம் காட்ட முன்வரவில்லை. அந்த வீடியோக் காட்சிகளின் படி, எனது மகன் இன்னமும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறேன். எனது மகனைத் தேடித் தருமாறு உரியவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்."

Aucun commentaire:

Enregistrer un commentaire