dimanche 17 janvier 2016

இலங்கையில் அரசியல் சாசனத்தால் பௌத்தம் பாதிக்கப்படாது' ரணில் உறுதி

பௌத்த மதத்துக்கு எந்த பாதிப்புகளும் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.புதிய அரசியல் சாசனத்துக்கு அனைத்து தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும் என்கிறார் ரணில்

நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் சாசனத்தின் மூலம் பௌத்த மதம் பாதிக்கப்படும் என சிலர் கூறிவந்த நிலையில், பிரதமரின் இந்த வாக்குறுதி வந்துள்ளது.
அதேபோல புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் ஆபத்துக்கள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கருத்துக்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் கருத்துக்களும் உள்வாங்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
உரிய நேரத்தின் தமது கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்
நாட்டின் புதிய அரசியல் சாசனம் இயற்றப்படுவதில் பொதுமக்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
உலகளவில் முதல் முறையாக புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைக்கு, சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துக்கள் பெறப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பது என்பது தொடர்பில், தற்போதுள்ள அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்ததுக்கு அமையவே புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire