dimanche 1 décembre 2013

தமிழர்களுக்கு தீர்வு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: இந்தியா

இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இலங்கையின் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் நிலையில் இருந்து இந்திய அரசு ஒருநாளும் பின்வாங்காது என்று இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் சனிக்கிழமையன்று நடந்த கருத்தரங்கத்தில் பேசிய இந்திய நடுவணரசின் அமைச்சர் ப.சிதம்பரம் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையைப் பற்றி ஒரு விரிவான, உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும். அந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் இந்தியாவின் கோரிக்கை என்று கூறிய சிதம்பரம், தொடர்ந்து அந்த கோரிக்கையை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் குரல் தொடர்ந்து இப்படி ஒலிப்பதன் காரணமாகத்தான் பலநாடுகளும் இன்று அதே குரலை ஒலிக்க தொடங்கியிருப்பதாக கூறிய சிதம்பரம், இதுவரை இதைப்பற்றி பேசாத பிரட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இப்போது இதை பேசுவதானது இந்த விடயத்தில் இந்திய ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பாஜக ஆதரவு தரவில்லை என்று தெரிவித்த சிதம்பரம், அந்த கட்சியின் தமிழக தலைவர்கள் இலங்கை தமிழர்கள் மீது காட்டும் கரிசனை போலியானது என்று விமர்சித்தார்.
அதேவேளை இலங்கையில் தமிழர்கள் தமது அரசியல் சாசன உரிமைகளை முழுமையாக பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று சிதம்பரம் கூறினார்.
13வது அரசியல் சட்டத் திருத்தத்தை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய சிதம்பரம், ஆனால் இதை இந்திய அரசு எதிர்ப்பதாகவும், இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் அனைத்து அரசியல் உரிமைகளும் பெற்றுவாழவேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என்றும் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire