mercredi 18 décembre 2013

கத்தியால் குத்துவதற்கு சமன் தமிழர் ஒருவருக்கு சிங்களத்தில் கடிதம் அனுப்புவது! அமைச்சர் வாசுதேவ

தமிழர் ஒருவருக்கு அவர் தமிழ் என்று தெரிந்தும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவதற்கு சமனாகும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தனித் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியிலும், தனிச் சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழியிலும் கடமையாற்றக் கூடியவாறு அரச ஊழியர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மொழி அமுலாக்கல் மற்றும் அரச மொழிகள் அமைச்சு உட்பட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட 10 சிரேஷ்ட அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச அலுவலகங்களில் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்பாளர்கள் இருக்க வேண்டும். அரச அலுவலகங்களில் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் மும்மொழிகளிலும் இருக்க வேண்டும்.
அரச அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் அங்கு சென்று மொழிப் பிரச்சினைக்கு உள்ளானால் 1956 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை பெற முடியும். அதே இடத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
தனியார் பஸ் வண்டிகளில் இப்போது மும்மொழியிலும் பெயர்ப்பலகைகள் இடப்படுகின்றன. ஆனால் இ.போ.ச. பஸ் வண்டிகளில்தான் இன்னமும் அமுல்படுத்தவில்லை. அவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்படும்.
இந்த நாட்டில் மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். மொழி அமுலாக்கல் தொடர்பாக பலவிதமான திட்டங்கள் முன்னெடுத்த போதும் அவை சரியான முறையில் வெற்றியளிக்கவில்லை.
2014 ல் கிளிநொச்சியிலும் இரத்தினபுரியிலும் மொழி அலுவலகம் திறக்கப்படும். இதேபோன்று அடுத்தாண்டு  தேசிய ஒற்றுமை மாநாடும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சகல இனங்களிலும் தலைவர்கள், மதத் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொள்வர். மொழிப் பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படாமல் எதனையும் சாதிக்க முடியாது. நானும் மொழியை கற்கவுள்ளேன்.
சிங்கள மக்கள் இல்லாமல் தமிழருக்கு தீர்வு இல்லை. இதேபோன்று தமிழ் மக்களின் உடன்பாடு இல்லாமல் சிங்களவர்களுக்கு இந்த நாட்டில் ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தவும் முடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த போதும் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இருதரப்புக்கும் இடையே பேச்சுக்கள் இடம்பெற வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire