mercredi 11 décembre 2013

பொங்கியெழுவோம் என்று சம்பந்தன்;ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் என்று அகாசி

தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகள், இன்னும், இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படாது போனால், தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரியளவிலான அறவழிப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன். 

ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியை நேற்றிரவு கொழும்பில் சந்தித்தபோது, இந்த எச்சரிக்கையை விடுத்த இரா.சம்பந்தன், இந்த அறவழிப் போராட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். 

நேற்றிரவு கொழும்பு - ஹில்டன் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

சுமார் இரண்டரை மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், பொன்.செல்வராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, இரா.சம்பந்தன், 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை. 

வடக்கு, கிழக்கு இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. 

அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. 

வலி.வடக்கு, சம்பூர் மக்கள் இன்னும் மீளக் குடியேற்றப்படவில்லை. 

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள், இந்துக் கோவில்கள் மற்றும் பாடசாலைகளை சிறிலங்கா இராணுவத்தினர் இடித்தழித்து வருகின்றனர். 

இதனை நேரடியாகப் பார்வையிடச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இராணுவத்தினர் தடைவிதித்து அவரைத் திருப்பியனுப்பியுள்ளனர். 

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் தமது பணிகளைத் தொடர மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது. 

மாகாணசபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

2014 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கே சிறிலங்கா அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. 

போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், பாதுகாப்பு செலவினங்களுக்கு சிறிலங்கா அரசு ஏன் இவ்வளவு நிதியை ஒதுக்கியுள்ளது? 

சிறிலங்கா அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளினால் நாட்டில் நல்லிணக்கத்துக்குரிய வழியே இல்லாமல் உள்ளது. 

சிறப்பு தூதுவராக, 23 வது தடவையாக சிறிலங்காவுக்கு வந்துள்ள நீங்கள், 24 வது தடவையாக, வரும்போதும் இதே நிலைமைதான் இங்கு இருக்கும். 

முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் இந்த அரசு எடுக்கவே மாட்டாது ' என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்குப் பதிலளித்த யசுசி அகாசி, வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்குமாறு தான் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின்போது வலியுறுத்தியதாகவும், நீங்கள் எதற்கும் அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்
.ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் ஜப்பான் – ஹக்கீமிடம் அகாசி வாக்குறுதிஅடுத்த ஆண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று, சிறிலங்காவின் புனர்வாழ்வு, மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி உறுதி அளித்துள்ளார். 

இந்த தகவலை சிறிலங்கா அரசாங்க இணையத்தளம் வெளியிட்டுள்ளது. 

சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த போதே, யசூசி அகாசி இந்த உறுதிமொழியை அவரிடம் வழங்கியுள்ளார். 

ஜெனிவாவில், சிறிலங்காவுக்கு ஜப்பான் அளிக்கும் ஆதரவு, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அகாசி தெரிவித்ததாக, சிறிலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire