samedi 26 mai 2012

சிறிலங்காவின் முதலாவது செயற்கைக்கோள் 2015ல் விண்வெளியில் உலாவரும்

சிறிலங்கா தனது முலாவது செயற்கைக்கோளினை 2015ம் ஆண்டளவில் விண்வெளி நோக்கி அனுப்புவதற்கு சீனா உதவவுள்ளது. இத்திட்டத்துக்காக சிறிலங்கா முதலீட்டு சபையுடன் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாக SupremeSAT நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இச் செயற்கைக்கோளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் அதனை விண்வெளிக்கு செலுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்காக SupremeSAT நிறுவனமானது சீன அரசுக்குச் சொந்தமான China Great Wall Industry Corporation - CGWIC நிறுவனத்துடன் உடன்பாடொன்றை எட்டியுள்ளது. 

2015ல் சிறிலங்காவானது விண்வெளிச் சுற்றுப் பாதையில் தனது முதலாவது தொலைத் தொடர்பு செயற்கைக்கோளினை உலாவரவிடும் என SupremeSAT நம்புகின்றது. 

"நாங்கள் ஏற்கனவே சீன நிறுவனத்துடன் இணைந்து இரு செயற்கைக்கோள்களை விண்வெளிச் சுற்றுப் பாதையில் அனுப்பி வைத்துள்ளோம். இந்நிலையில் 2015ல் சிறிலங்காவினுடைய முதலாவது செயற்கைக்கோளை விண் நோக்கி அனுப்புவோம் என நம்புகின்றோம்" என SupremeSAT நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

செயற்கைக்கோள்களை வழங்குதல், அவற்றை விண் நோக்கி அனுப்புதல் மற்றும் அனைத்துலக விண்வெளி சார் ஒத்துழைப்பை வழங்குதல் போன்றவற்றுக்காக சீன அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரேயொரு வர்த்தக நிறுவனமாக CGWIC காணப்படுகின்றது. 

வலைப்பின்னல் சேவைகள், பல்வேறு ஒலிபரப்பு முறைமைகள், அலைவரிசை சேவைகள், இணைய வழி அரசாங்க மற்றும் கற்றல் சேவைகள் போன்றன உள்ளடங்கலாக பல்வேறு தொடர்பாடல் சேவைகளை SupremeSAT வழங்க முடியும். இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அங்கீகாரத்துக்காக தமது நிறுவனம் தொலைத் தொடர்பாடல் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதாகவும் SupremeSAT நிறுவனத்தின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire