dimanche 13 mai 2012

இலங்கையில் இயங்கும் சில இந்திய நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவந்து அடிமட்ட சம்பளத்திற்கு வேலைவாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்குள் கொண்டுவரப்படும் இந்தத் தொழிலாளர்களுக்கு குடியேற்றச் சட்ட விதிகளை துஷ்பிரயோகம் செய்து தொழில் விசா அனுமதிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதாக தெரியவருகிறது.
கூடுதல் சம்பளம் வழங்குவதாக ஆசைகாட்டி வட இந்தியாவிலிருந்து இவ்வாறான தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டு, மிகுந்த அடிமட்ட சம்பளத்துக்கு மிக மோசமாக தங்குமிட வசதிகளுடன், வேலை வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்திய உருக்கு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த வட இந்திய தொழிலாளி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவரது இழப்புக்கு உயிர்காப்பீட்டு தொகையாக குடும்பத்தினருக்கு மிகக்குறைந்த பணமே வழங்கப்படுவது தெரியவந்தபோது, குறித்த தொழில்நிறுவனத்தின் சக தொழிலாளர்கள் சிலர் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திடம் முறையிட்டிருக்கிறார்கள்.
அதனையடுத்து இந்தப் பிரச்சனையில் இந்தியத் தூதரகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்த செய்தியை வெளியிட்டு வரும் ஹிந்து நாளிதழின் கொழும்புச் செய்தியாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இவ்வாறான தொழிலாளர்களை கூட்டிவந்து இலங்கையில் தொழில் அனுமதி பெற்றுக்கொடுப்பவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளூர் குடிவரவுத்துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பின்றி நடக்க வாய்ப்பில்லை என்றும்ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்தியாவிலிருந்து சாதாரண வேலைகளுக்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுகின்ற விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவருவதாக இலங்கையின் தொழிற்துறை அமைச்சர் காமினி லொக்குகே பிபிசியிடம் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire