mardi 29 mai 2012

ஈழத்தமிழர் அவலத்தை எடுத்துரைத்த தோழர் சி.மகேந்திரன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக உறவுக்கான பொறுப்பாளர் ஜாக் பாத் [Jacques Fath National Council member, executive committee and national coordination of the PCF, responsible for international relations] அவர்களை நேற்று [27- 05-2012 ஞாயிறு] மதியம் சந்தித்து உரையாடினார். 

பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பு உரையாடலின் போது ஈழத்தமிழர்களின் அவலம், மற்றும் அனைத்துலக அரசியல் நிலை, இந்தியாவின் சமூகப்பிரச்சனைகள், பிரெஞ் தேர்தல் என்பன முக்கியத்துவம் வகித்தன."ஈழத்தமிழர் அவலம், அரசியல் தீர்வு என்பவற்றை அறிவதில் ஆர்வம் காட்டிய பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகப் பொறுப்பாளர் ஜாக் பாத்தும் ஈழ நிலைமைகள் குறித்து விளக்கமான அறிவைக்கொண்டிருந்தார் என்பது தனக்கு ஆச்சரியமாகவும், திருப்தியாகவும் இருந்தது. அது தனது பணியை இலகாக்கியது" என 'புதினப்பலகை'யிடம் தெரிவித்தார் தோழர் சி.மகேந்திரன். 

மேலும் ஈழநிலைமைகள் குறித்து ஜாக் பாத்துக்கு விளக்கமளிக்கையில், 

"இன அழிப்பு என்பதனை இலங்கை அரசு சுதந்திரத்திற்கு பின் தொடர் நிகழ்வாக பின்பற்றி வந்திருக்கின்றது. இதற்கு உதாரணமாக இலங்கையின் மக்கள் தொகையை கணக்கிட்டு சொல்ல முடியும். 

சதவீத அடிப்படையில் தமிழினம் மிகப்பெரிய அளவில் அழிக்ப்பட்டுள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழ்மக்களுக்கு எதிரான ஒற்றையாட்சி சர்வாதிகாரத்தை அரசியல் சட்டம் உருவாக்கி வைத்திருக்கின்றது. இலங்கை இதற்கேற்றவாறு சிங்கள பெளத்த தேசம் மாற்றிக்கொண்டது. இந்த பின்னணியில்தான இலங்கை பிரச்சனையை புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான அரசைியல் இருப்பை முற்றாக நிராகாரித்து விட்டது. சட்டங்களை இயற்றி எந்த பயனையும் நாடாமன்றத்தின் மூலம் பெற முடியவில்லை. அதேபோல முழு இலங்கையின் இராணுவம் காவல்துறை என்பவற்றில் தமிழ் மக்கள் இடம் பெறுவதை இல்லாமல் தடுத்துவிட்டது. 

ஈழத்தமிழ் மக்கள் இதை எதிர்த்துதான் புதிய அரசிலையும் போராட்டத்தையும் உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள. 

முள்ளி வாய்க்கால் படுகொலையின் பின் ஒரு புதிய தேவை எழுந்துள்ளதாக இந்திய கம்யுனிஸட் கட்சி உணர்ந்துள்ளது. தேசிய இன ஒடுக்குமுறை கொள்கைகளை முதலில் வலுவாக்கிய பெருமை கம்யுனிஸட் கட்சிகளுக்கு உண்டு. 

உலக மயமாக்க பின்னணியில் தொன்மையான மொழிகளும் கலாச்சாரங்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது கம்யுனிஸட் கட்சிகள் உலக அளவில் ஒன்று பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பின்னணியில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை கம்யுனிஸட் கட்சிகள் கூர்ந்து ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும்" எனத்தான் மேலும் விளக்கமாகத் தெரிவித்தாகவும் தோழர் சி.மகேந்திரன் 'புதினப்பலகை'யிடம் பகிர்ந்து கொண்டார். 

ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதிலும், ஐரோப்பிய இடதுசாரிகளை இடையே கருத்துருவாக்கம் ஏற்படுத்துவதிலும் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்தொற்றுமை இருந்ததாகவும் மகேந்திரன் தெரிவித்தார். 

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலகம் மூடப்படும் வழமையை கொண்டிருந்த போதும் தோழர் சி.மகேந்திரன் வருகைக்காக செயலகம் திறக்கப்பட்டதும், சந்திப்பு உரையாடல் செயலகத்திலேயே இடம் பெற்றது என்பதும், பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் உரையாடலில் பங்கேற்றார் என்பதும் கம்யூனிஸ்ட்களின் தோழமையை எடுத்துக்காட்டியது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் துணைச் செயலர் தோழர்.சி.மகேந்திரன். 

பதினைந்து நாள் பயணமாக ஐரோப்பா வந்திருந்த தோழர் சி.மகேந்திரன் தனது பயணத்தின் இறுதி நாளில் ஒருநாள் பயணமாக பிரான்சிற்கு வருகை தந்திருந்தார். இந்த ஒருநாள் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் பிரெஞ் கம்யூனிஸ்ட் கட்சியை சந்திக்கும் ஏற்பாட்டை குறுகியநாள் இடைவெளியில் ஏற்பாடு செய்வதில் President of Larmes de Paix [Tears of Peace] அமைப்பின் தலைவரும், பல்கலைகழக மாணவனுமான அன்ரன் ஜோனாஸ் கடுமையாக உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire