vendredi 1 avril 2016

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை 50,000 ரூபாய் அபராதம்! நல்லாட்சி அரசின் இன்னொரு முகம்?

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை!முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கேகாலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இவருக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர் கடசியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். 

இதனையடுத்து கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் எந்த சட்ட சிக்கல்களோ அல்லது தொந்தரவுகளோ இன்றி இலங்கைக்கு வந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்காக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 

பாரிய சர்சைகளுக்கு பின்னர் நாட்டைவிட்டு வௌியேற்றப்பட்ட அவர், மீண்டும் அந்த அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனேயே நாட்டுக்குள் வந்து அரசியல் செய்தமை குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை வௌியிட்டனர். 

எதுஎவ்வாறு இருப்பினும் முன்னிலை சோசலிசக் கட்சி அப்போதைய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தினை தன்னை வைத்து நிறைவேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 

இதேவேளை தேர்தலின் பின்னர் குமார் குணரட்னம் என்பவர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருப்பதாக, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வேளை, அவரை நாட்டில் இருந்து வௌியேற்றக் கூடாது என, முன்னிலை சோசலிசக் கட்சியால் அடிப்படை உரிமை மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

எனினும் அந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் 2015ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி அவரை நாட்டில் இருந்து வௌியேற்ற முடியும் என குறிப்பிட்டது. 

இதனையடுத்து தலைமறைவாக இருந்த குமார் குணரட்னம் கடந்த நவம்பர் 4ம் திகதி கேகாலை - அகுருகெல்ல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 நல்லாட்சி அரசின் இன்னொரு முகம்?
பாஸ்போட் வழக்கில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச உடனேயே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இதுவரை விசாரணை செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
பாஸ்பொட் வழக்கில் கைது செய்யப்பட்ட குமார் குணரட்ணம் 150 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவர்மீதான வழக்கில் அவருக்கு ஒரு வருட தண்டனையும் 50 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான வழக்கில் இரு அணுகுமுறைகள். விமல் வீரவன்சவுக்கு ஒரு நியாயம்.
குமார் குணரட்ணத்திற்கு இன்னொரு நியாயம். இதுதான் நல்லாட்சி அரசின் நியாயமா?
இலங்கை மத்திய வங்கி தலைவர் சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரன் என்பவருக்கு ஒரே நாளில் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் குமார் குணரட்ணத்திற்கு இலங்கை குடியுரிமை மறுக்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
குமார் குணரட்ணம் இலங்கையில் பிறந்தவர்.
குமார் குணரட்ணம் இலங்கையில் படித்தவர்
குமார் குணரட்ணம் இலங்கையில் திருமணம் முடித்தவர்.
குமார் குணரட்ணம் இலங்கையில் போராடியவர்.
பாதுகாப்பு காரணமாக இலங்கையை விட்டு வெளியேறியவர்
அவர் மீண்டும் இலங்கையில் வாழ அருகதையில்லையா?
அவருக்கு குடியுரிமை மறுப்பது என்ன நியாயம்?
அவரை சிறையில் அடைப்பது என்ன நியாயம்?
ஒருபுறம் வெளியேறிய தமிழ் மக்களை திரும்பி வரும்படி அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி மைத்திரி மறுபுறம் திரும்பி வந்த குமார் குணரட்ணத்தை சிறையில் அடைப்பது ஏன்?
இதுதான் நல்லாட்சி அரசின் நியாயமா?
குமார் கணரட்ணம் செய்த குற்றம்தான் என்ன?
அவர்,
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியது குற்றமா?
காணமல் போனோருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது குற்றமா?
தமிழ் சிங்கள மாணவர்களை ஒன்று திரட்டி போராடியது குற்றமா?
தமிழ் சிங்கள அனைவருக்கும் சமவுரிமை என்று கூறியது குற்றமா?
அல்லது,
அவர் முன்னிலை சோசலிசக்கட்சியை உருவாக்கியது தவறா?
இலங்கை மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து போராடியது தவறா?
எல்லாவற்றையும்விட அவர் தமிழனாக பிறந்தது தவறா?
எதற்காக அவரை தண்டிக்க வேண்டும்?
எதற்காக அவர் குடியுரிமையை மறுக்க வேண்டும்?
நல்லாட்சி அரசு இதற்கு பதில் தருமா?

Aucun commentaire:

Enregistrer un commentaire