dimanche 12 janvier 2014

இலங்கை அரசுடன் தொடர்புடையவரின் குடியுரிமை பறிமுதல்;பிரான்ஸ்

பிரான்ஸ் அகதிகள் திணைக்களமான ‘OFPRA’ ஈழத் தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி தகுதி நிலையை மீளப்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறிலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் OFPRA தெரிவித்துள்ளது.

2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார்.அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார்.

அத்துடன் சிறிலங்கா தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளார்.

இவரது குடும்ப விபரங்களை நிர்வாக ரீதியாக ஒழுங்கு படுத்துவது தொடர்பான ஒரு சந்திப்பில் இந்த விபரங்கள் பிரான்ஸ் அகதிகள் திணைக்களமான OFPRAக்கு தெரியவந்தைதையடுத்து அந்த அமைப்பு அந்த இலங்கைத் தமிழருக்கு வழங்கிய அகதி தகுதி நிலையை திரும்பப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக OFPRA அவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்:

“2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அகதிகளுக்கான ஜெனீவா சட்டத்தின் 1சி 1 சரத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பாரிசிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு 3 தடவைகளுக்கு மேல் சென்று வந்தது, நிர்வாக ரீதியாக தொடர்பு கொண்டது. சிறிலங்காவில் உள்ள அரச நிர்வாகத்துடன் எந்தவித தடங்கலுமின்றி தொடர்பு கொண்டது ஆகிய காரணங்களின் அடிப்படையில் மீளப் பெற்றுக்கொள்கிறோம்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தல் உள்ளது என்று அகதி தகுதிநிலை பெறுவதற்காக நீங்கள் தெரிவித்த காரணங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் நீங்கள் எந்தவித நெருக்கடிகளுமின்றி தொடர்பு கொண்டதன் மூலம் வலுவற்றதாகியுள்ளதென தெரிவித்துள்ள பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் (OFPRA) வெளிநாட்டவர் வருகை மற்றும் தங்குவதற்கான உரிமை தொடர்பான பிரான்சின் எல் 731-1, ,எல் 731-2 மற்றும் ஆர் 733-10 ஆகிய சட்ட சரத்துக்களின் கீழ் தங்களது முடிவை ஒரு மாத காலத்துக்குள் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

“பிரான்சில் அகதி தகுதி நிலை பெற்ற ஒருவர் சிறிலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாகவே அல்லது வேறெந்த வகையிலுமோ எந்தவித தொடர்பும் வைத்திருக்க கூடாது” என்ற விடயம் தனக்கு தெரியாது என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்த கருத்தை பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் ஏற்க மறுத்துவிட்டது.

புலம் பெயர்ந்த தமிழர்களுடைய வரலாற்றில் பிரான்சில் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதிநிலை திரும்பப் பெறப்படுவது இதுவே முதல் தடவையாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Aucun commentaire:

Enregistrer un commentaire