jeudi 27 novembre 2014

இது ஒரு ஆரம்பம்! முடிவல்ல. மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்

கடற்புலி - நிரூபன் (PK, Canon-23 heavy weapon) ஆகிய சீழ்வடியும் சாந்த குமார்:- தொகுப்பு - நடராஜா குருபரன்:-
2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்
படுக்கையில் - நிரூபன்
விடுதலைக்காக புறப்பட்டு மரணித்த, வீர காவியமாக மாறிய அனைத்து போராளிகளுக்கும், போராட்டத்தில் கொல்லப்பட்ட எம் மக்கள் அனைவருக்கும், சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.... உங்கள் தியாகங்கள் என்றோ ஒரு நாள் போலிகளை  கூட்டெரிக்கும்..... 

இந்தப் பதிவு புனைவு அல்ல – போலி அல்ல – பாட  போதனை அல்ல -– தமிழருக்கு ஒன்றுமே இல்லாத தெற்கின் அரசியல் மாற்றமும் அல்ல -  வியாபாரமும் அல்ல - உண்மையின் தரிசனம்..... ஓரு சிலர் கேட்ட எம்மவர் வரத்தின் தரிசனம்....

ஆம்... எம் நேர்மையின் மீது, நாம் கடந்து வந்த பாதையின் மீது – நாம் நேசிக்கும் எம் ஊடக செயற்பாட்டின் மீது எம் தார்மீக உணர்வின் மீது – எமது இணையத்தின் மீது – ஆசிரியர் பீடத்தின் மீது எம் வானொலி மீது -  தம் நிலை உணராத அற்பர்கள் விடுத்த சாவாலுக்கான முதலாவது பதிவு... இதற்கான சகல ஆதாரங்களும் எம்மிடம் உண்டு.. தவிர்க்கப்பட வேண்டிய பல பெயர்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. எதிர்வினையாற்ற விரும்புகிறவர்கள் மறைந்து நிறு கல்லெறியாது சொந்த பெயரில் முகவரியில் பதிலுறுக்க முடியும்...

இது ஒரு ஆரம்பம்! முடிவல்ல..... 

நடராஜா குருபரன்.... 

நான் கடற்புலிகளின் கனரக ஆயுதங்கள் பாவிக்கும் குழுவில் இருந்த ஒரு குழுத்தலைவன். எனது இயக்கப் பெயர் நிரூபன் சாந்தகுமார் என்ற இயற் பெயருடைய எனது வயது இப்போ 30. என்னை உங்களுக்கு தெரியுமா?

என்னோடு போராடிய பலர் இப்போ ஒஸ்ரேலியாவிலும் கனடாவிலும் இருக்கிறீர்களே... பலதடவை உங்களுடன் பேச முற்பட்டேனே...  முன்பு களத்தில் இருந்தபோது PK, Canon-23 heavy weapon என்றால் உடனே என்னை ஞாபகப்படுத்தி இருப்பீர்கள்... இப்போ என்னை உங்களுக்கு தெரியாது... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....

ஒரு காலத்தில் தரையில் சண்டை இருக்கும் போது எனது கனரக ஆயுத அணியைத் தானே  தரைப்புலிகள் தளபதிகள்  அழைப்பார்கள்.. அதுவும் என்னோடு போராடிய என்னை தெரிந்த இப்போது வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போ தெரிய நியாயம் இல்லை... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....

இறுதி யுத்தத்தில் விழுப்புண் அடையாது, நானும் முன்னைய யுத்தம் ஒன்றில்  மரணித்திருந்தால் இன்று உலகம் முழுவதுமாக கொண்டாடப்படும் மாவீரர் தினங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுட்டி விளக்குடன் உருவப்படமாக இருந்திருக்கலாம்... எனக்கு கவிதை எழுதியிருப்பீர்கள்.... இந்தியாவில் பாட்டு இயற்றி சமூக வலைத் தளங்களில் ஏற்றி இருப்பீர்கள்... கட்டுரை எழுதியிருப்பீர்கள்... கூடவே மரணித்த பின் நான் நேசித்த என் தலைவரால் லெப்.கேணல்  பட்டம் வழங்கப்பட்டு இருக்கும்... அத்தைகைய தரத்தில்தான் இருந்தேன்... இவை எல்லாம் குறைந்த பட்சம் என் ஏழைத் தாயிற்கு ஒரு கௌரவமாகவும் இருந்திருக்கலாம்....
ஆனால் படுக்கையை விட்டு இறங்க முடியாது இருக்கும் என்னை பார்ப்பதற்கு என் ஏழைத் தாய் கூலி வேலைக்கு போகிறார்... இயக்கத்தில் இருந்த என் உற்ற நண்பர்கள் சிலர் பெயின்ட் அடித்து பணம் அனுப்புகிறார்கள்...
மாற்றுவதற்கான சாரத்திற்கு ஆகவும், ஓடிக்கலோனுக்காவும்.... அவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை அனுப்பவில்லை.... தமது ரூபாய்  உழைப்பில் மிச்சமாக்கி தருகிறார்கள்...

என் இயலாமையால் எனது முகநூலை துண்டித்து விட்டேன்.... எத்தனை பேரிடம் உதவி கேட்டு இருப்பேன், பிச்சை போடுங்கள் என மண்டியிட்டு இருப்பேன்... எவரும் உதவவில்லையே...

இப்படி ஒரு அறிவித்தலையும் நண்பர்கள் வெளியிட்டு இருந்தார்களே..

உதவும் கரங்களை எதிர்பார்த்து படுத்த படுக்கையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னால் போராளி:-

ஈழத்தமிழ் இளைஞனின் உயிரைக்காப்பாற்ற உதவும் கரங்களுக்கு உதவும் கரங்களை எதிர்பார்த்து படுத்த படுக்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளின் முன்னால் போராளியான நிரூபன் த/பெ சாந்தகுமார் , வயது 30, என்பவர் தற்போது வவுனியா செட்டிக்குளம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவர் 2009.03.18 ஆம் திகதியன்று ஈழத்தில் நடந்த யுத்தத்தில் விழுப்புண் அடைந்தார்.

அதன் காரணமாக இடுப்புக்கு கீழ் முற்றாக செயலிழந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை படுத்தபடுக்கையிலே உள்ளார். இவருக்கு படுக்கை புண் மிக மோசமான நிலையில் இருந்த போது, ஒரு மாதத்திற்கு முன்னர் முகப்புத்தகம் வாயிலாக (பேஸ்புக்) இவரது சிகிச்சைக்காக உதவி கேட்டும் , யாரும் உதவ முன்வரவில்லை.

தற்போது காச நோயாலும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் உள்ளார். எமது சகோதரன் நிருபனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து செல்கிறது. எனவே இவரது மருத்துவ சிகிச்சைக்காக மனிதநேயமுள்ள உறவுகளே உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம். என அறிவித்தும் இருந்தார்கள்???

எவருமே உதவவில்லையே ... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....

நான் துன்பத்தின் உச்சியில் இருந்த போது யுத்தத்தில் தப்பி வந்து உங்கள் புலம்பெயர் தேசத்தில் லண்டனில் இருக்கும் எங்கள் இயக்கத்தின் முக்கிய தளபதியிடம் கூட உதவி கேட்டேனே... அவர் வசதி அற்றவர் அல்ல... எங்கள் கடற்புலியில் முக்கிய இடத்தில் இருந்தவர்... இப்போ பல இலட்சங்களுக்கு அதிபதி... அவருக்குக் கூட என்னை ஏமாற்ற எப்படி மனம் வந்தது....

பலருடைய வற்புறுத்தல்களால் இந்தியாவுக்கு வரவழைத்த அவர் அங்கு நிர்க்கதியாக விட்டு லொச்சில் தவித்தேன்...
இந்த நேரத்தில் தமிழகத் தோழர் .....ன் (தனது பெயரை் வரக் கூடாது எனவிரும்பும் உதவியாளர்) உதவியாளர்களின் சிறிய பண உதவியில் அல்லாடி எனது ஆசிய நண்பர்கள் சிலரின் கூலிவேலையால் கிடைத்த உதவியாலும் காத்திருந்தேன் உங்களது உதவிக்காக.. 
இந்திய ரூபாயில் 6000.00 ரூபாயை வங்கிக்கு அனுப்பி இதை விட உதவ முடியாது எனச் சொல்லி பிறிதொரு நாட்டில் அனாதரவாய் விட்டுவிட எப்படி உங்களுக்கு முடிந்தது...

காரணம் இப்போ புலம் பெயர் தேசத்தில் நீங்கள் நாட்டை மீட்கும் 5ஆம் கட்டப் போருக்கு தயாராகும் புலியாக மாறி இருக்கிறீர்கள்...  நானும் என்போன்றவர்களும் இடுப்புக்கு கீழ் இயங்காத படுக்கைப் புண்ணுக்கு உள்ளான சாதாரண ஏழைத் தாய்மாரின் பிள்ளைகள் தானே....

நான் இந்தியாவில் இருந்த போது இந்திய கனவானாகிய உணர்வாளர் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி ம.....ம்... (இவரும் தன் பெயரை பிரபல்யப் படுத்துவதை விரும்பாதவர்) இந்திய மதிப்புக்கு 8 லட்சம் ரூபாய் (பிரித்தானிய பண மதிப்பில் இப்போதைய பெறுமதி 8ஆயிரம் பவுண்ட்) செலவுடைய சத்திர சிகிச்சையை 2 லட்சம் ரூபாய்க்கு பிரித்தானிய பணப் பெறுமதி 2000.00 பவுண்ட் வைத்தியசாலைக் கட்டணத்துடன் செய்வதாக கூறினாரே... (2013ஆண்டின் பிரித்தானிய மாவீரர் தின மண்டபச் செலவு அண்ணளவாக 87ஆயிரம் பவுண்ட்...) ஆனால் எவரும் எனக்கு உதவவில்லையே....

என்னுடன் இருந்த எனக்கு தெரிந்த என் நண்பர்களுக்கு தெரிந்த, புலம்பெயர்ந்து வாழும் எத்தனை முன்னாள் போராளிகளிடம் இந்த உதவியைக் கேட்டு இருப்பேன் யாரும் திரும்பியும் பார்க்கவில்லையே... என் மக்களுக்காக ஆயுதம் தூக்கியதை தவிர நான் என்ன தவறு செய்தேன்...

இறுதியாக எதுவுமே முடியாது மீண்டும் இலங்கை சென்று படுக்கையில் விழுந்தேன்.... குறைந்தது என் மன ஆறுதலுக்கு என்னுடன் பேசுமாறு எத்தனைபேரிடம் கெஞ்சியிருப்பேன்.... நீங்கள் பேசக்கூட இல்லையே... காரணம் நான் தீண்டத்தகாத விழுப்புண் அடைந்து மரணத்திற்காக காத்திருக்கும் படுக்கைப் புண்... நோயாளி ஆச்சே....

இனி நீங்கள் பேசினால் கூட என்ன பயன் கிடைக்கப் போகிறது... இப்போ நான் உடலாலும் உளத்தாலும் மனதாலும் சீழ் வடியும் சாந்த குமார்... போராளி - தளபதி – கடற்புலி நிரூபன் அல்ல... காரணம் அடுத்த கட்ட போருக்கு தயாராகும் உங்களுக்கு கடற்புலி நிருபன் தளபதி நிரூபன்  என்றால் சீழ் புண்ணுடன்  இருப்பதனால் இழுக்காக இருக்கலாம்...

ஆனாலும் எனக்கு புலம்பெயர்ந்த மக்கள் மீதும் எமது அமைப்பின் பெயரால் இயங்குபவர்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு எனது மரணத்தின் பின்பு  2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப் போகும் பிரமாணட்டமான மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிட்டு மாலைபோட்டு, முண்டி அடித்து வந்து  சுட்டி விளக்கு எரிப்பீர்கள்... உங்களது அந்த கௌவரவத்  திருவிழாவில், ஒரு படம் பிடித்து, என் ஏழைத் தாய் உயிருடன் இருந்தால் அவரது விலாசத்திற்கு  உன் மகன் மாவீரர் என்று பெயரிட்டு அனுப்பி விடுங்கள்... ஏனென்றால் நீங்கள் வரையும் வீர காவியங்களை முகநூலில் பார்வையிட முடியாத ஏழை அவர்...... படத்தை பார்த்து மகிழக் கூடும்...புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு ஈழத்தில் இருந்து முன்னாள் பெண் போராளியின் வேண்டு  அன்பான உறவுகளே எம் மக்களின்...http://www.globaltamilnews.net/…/language/ta-IN/article.aspx  

Aucun commentaire:

Enregistrer un commentaire