mercredi 26 novembre 2014

முள்ளிவாய்க்கால் வியாபாரிகளுக்கு வாழ் வழிக்கும் வரப்பிரசாதமாகியுள்ளது ஈழம்

பிரபலமான தமிழ் வியாபாரப்பண்டம் ஈழம் அதில் முள்ளிவாய்க்காலுக்கு கேள்வி அதிகம். அதை சர்வதேச வணிக வளாகமாக்கும் முயற்சியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதும் பயன் பெறுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. ஈழவியாபாரத்தில் தமக்கு கிடைத்த பலன்கள் தமது பிள்ளைகளுக்கும் உற்ற சுற்றத்திற்கும் கடத்தியுள்ளார்கள். மனித உரிமை மீறல்கள் எல்லாம் பணப்பட்டுவாடாவாக மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு புலம்பெயர்வாழ்வு கிடைத்தது உள்ளுர் தமிழர்களின் தியாகத்தாலேயே. அது இன்று நானாவித வியாபாரிகளுக்கும் வாழ் வழிக்கும் வரப்பிரசாதமாகியுள்ளது. யுத்த காலத்தில் நிதி யுத்த யந்திரத்தை பலப்படுத்துவதற்கும் மரணங்களுக்கும் உதவியது. இப்போது தமிழ் மக்களின் அவலம் தீவிர சூறையாடலுக்குள்ளாகியுள்ளது. எல்லாப்பாதையும் ரோமுக்கே என்பதுபோல் இன்றைய பல நாடகங்கள் சர்வதேச சமூகம் -புலம்பெயர் தமிழர் பொருளாதாரம் என்பவற்றை குறிவைத்தே நடைபெறுகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல் அவசர அவசரமாக காரியங்கள் நடைபெறுகின்றன. முள்ளிவாய்க்கால் மண்ணும் சாம்பலும் இன்னும் கொஞ்ச நாட்களில் வியாபாரப்பண்டமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த கடைவிரிப்பால் ஈழத்தில் துன்புறும் தமிழர்களுக்கு எந்த லாபமும் இல்லை. மக்கள் கடந்து வந்த 30 வருடங்களில் பல்வேறு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள் மனித உரிமை மீறல்களோ மனிதப்பேரவலங்களோ ஒரு குரூர வரலாற்று தொடர்ச்சி கொண்டவை. அதில் அரச பயங்கரவாதிகளுக்கு மாத்திரமல்ல, விடுதலையின் பேரில்; ஆயுதமேந்தியவர்களுக்கும் கனதியான பங்கிருக்கிறது. இழப்புக்களைச் சந்தித்தவர்கள் எதையாவது பெறுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. இவர்கள் இருட்டில் தான் வாழ்கிறார்கள்.                                           ...தோழர் சுகு

Aucun commentaire:

Enregistrer un commentaire