vendredi 29 juin 2012

யாழ்.மாவட்டத்தில் மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளன.


யாழ்.மாவட்டத்தில் மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. இங்கு மக்களது நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன  யாழ்ப்பாண மாவட்டம் 1995இல் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் இருப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.

யாழ். குடாநாட்டை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து குறுகிய காலத்தில் பல்வேறு இடங்கள் “உயர் காப்பு வலயங்கள்’ என முத்திரை குத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்நோக்குவதற்கும், இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புக் கருதியும் “உயர் பாதுகாப்பு வலயங்கள்’ அமைக்கப்பட்டன. இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டத்திலேயே மிக அதிக எண்ணிக்கையான உயர் காப்பு வலயங்கள் காணப்படுகின்றன.

அங்கு மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர் காப்பு வலயங்களாகும். இந்த இடங்களில் பொதுமக்களின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துலக மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு மனிதாபிமான உடன்பாடுகளை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், நாட்டில் உயர் காப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதை இந்த அனைத்துலக உடன்பாடுகளால் தடுக்கமுடியாது. அதற்கான போதியளவு சட்ட வரைபுகள் காணப்படவில்லை. எனினும் உண்மையில் இவ்வாறான உயர் காப்பு வலயங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன.

ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கை பின்வரும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சரத்துகளைக் கொண்டுள்ளது:

 பேச்சு சுதந்திரம்
 அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம்
மத சுதந்திரம்
 ஒருவர் தனது சொந்தப் பண்பாட்டைப் பின்பற்றி அதனை மேம்படுத்துவதற்கான சுதந்திரம்
 சட்ட ரீதியான தொழில்கள், வர்த்தகம், முயற்சியாண்மை போன்றவற்றை மேற்கொள்வதற்கான சுதந்திரம்.

 நடமாடுவதற்கான சுதந்திரம், இலங்கைக்குள் எந்தவொரு பகுதியிலும் வசிப்பதற்கான சுதந்திரம்
அரசமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தச் சுதந்திரம் அனைத்தும் உறுதிப் படுத்தப்பட்டாலும் உயர் காப்பு வலயம் என்ற பெயரில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சொந்த இடங்களிலிருந்த மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை, மக்களின் நடமாடும் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவித்தல், சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதியாமை போன்றவற்றின் மூலம் இலங்கை அரசு அடிப்படைச் சுதந்திரத்தைக் கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் அனைத்துலகச் சட்டங்களை மீறிச் செயற்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் காப்பு வலயங்களும் அகற்றப்படும் என ஜனவரி 2010இல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். 2011 ஓகஸ்ட் முடிவில் அவசரகாலச் சட்ட நடைமுறைகள் காலாவதியாகிய பின்னர், உயர் காப்பு வலயங்களுக்கு இருந்த “உத்தியோகபூர்வ’ அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

ஆனால் இந்த மாற்றமானது ஒவ்வொரு மக்களும் இயல்பு வாழ்வை வாழமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கவில்லை. அல்லது இவ்வாறான “உத்தியோகபூர்வ’ செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமை யாழ். குடாநாட்டில் இயங்கும் அனைத்து இராணுவ நிர்வாகங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கவில்லை.

இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் 2011 முடிவுக்குள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால் இக்காலக்கெடுவுக்குள் பணி பூர்த்தி செய்யப்படவில்லை. அண்மையில், மாதகலைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் தமது நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானித்திருந்தனர். அப்படி நில உரிமையாளர்கள் தமது நிலங்களை மீட்பதற்குச் சட்டத்தை அணுகினாலும்கூட தற்போது நடைமுறையில் காணப்படும் நீதிமுறைகள் இவர்களுக்கு வலுவான தீர்வை வழங்கப்போவதில்லை.

வலி. வடக்கில் உயர் காப்பு வலயங்களில் காணிகளைக் கொண்ட சுமார் 26,000 வரையானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாது தவிக்கின்றனர். யாழ். குடாநாட்டில் உயர் காப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 வரையானவர்கள் அண்மைக் காலம்வரையில் சொந்த இடங்களில் மீள்குடியமர்ந்துவிட்டனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

உயர் காப்பு வலயங்கள் தொடர்பான கலந்துரையாடல், திட்டமிடல் மற்றும் அவற்றில் சில மக்களின் பாவனைக்காக விடப்பட்டமை போன்றன உயர் காப்பு வலயங்கள் தொடர்பில் தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து உயர் காப்பு வலயங்களும் மக்களின் பயன்பாட்டுக்காக மீளத்திறக்கப்படுமா என்றும் சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகின்றது.

இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள உயர் காப்பு வலயங்கள் மக்களின் பாவனைக்காக திறந்து விடும் விருப்பத்தை இலங்கை அரசு இன்னமும் கொண்டிருக்கவில்லை என்பதையே அதன் தற்போதைய நிலைப்பாடு சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை அரசானது மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனம், பொது மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம் போன்ற பல முக்கிய சாசனங்களை ஏற்றுக் கைச்சாத்திட்டுள்ள போதிலும், அவற்றைப் பின்பற்றி நடக்கவில்லை.

“ஒவ்வொருவரும் சம உரிமையுடன், கௌரவத்துடன், சுதந்திரமாக பிறக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் மற்றையவர்களை சகோதர மனப்பான்மையுடன் ஏற்று அவர்களின் உரிமைகளை மதித்து நடக்கவேண்டும்” என்று அனைத்துலக மனிதாபிமான உரிமைகள் சாசனத்தின் முதலாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசு பல பத்தாண்டுகளாக இதன்படி நடக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம்தான். உயர் காப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கான மக்களின் அடிப்படை மனித உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்கள் அழிந்துவருகின்றன.

அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 20-02-2006 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தது.

ஆனால் தற்போது அந்த நிலங்கள் உள்ளடங்கலாக பல பிரதேசங்களை அரசு உயர் காப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறைப் பிரதேசம், பொன்னாலை தொடக்கம் தொண்டமானாறு வரையான கரையோரப் பிரதேசங்கள் மாதகல், கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான் உள்ளடங்கலாகப் பல உயர் காப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன.

இதே போன்று மிருசுவில், கிளாலி, அரியாலை கிழக்கு, அல்லைப்பிட்டி போன்ற இடங்களும் இராணுவத்தால் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் இருந்த வசதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டு இப்போது போதியளவு வசதி வாய்ப்புக்கள் காணப்படாததால் மக்கள் மீளவும் அங்கு செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

முப்பது ஆண்டுகளாக நடந்த குருதி சிந்தும் போரை, உயர் காப்பு வலயங்களில் தமது சொந்த வீடுகளைக் கொண்ட மக்கள் படும் துன்ப துயரங்கள் இன்றும் நினைவூட்டுவனவாக உள்ளன. முதன் முதலாக உயர் காப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

 இந்த மக்கள் இன்று வரை அவர்களது சொந்த இடங்களில் மீள்
குடியேற்றப்படவில்லை. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்திலுள்ள தமது நண்பர்களினதும், உறவினரதும் வீடுகளில் தற்காலிகமாக வாழ்கின்ற அதேவேளையில், ஏனைய மக்கள் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கி வாழ்கின்றனர். இந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ முடியாததால் இவர்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதில் சங்கடங்களை எதிநோக்கியுள்ளனர்.

எந்தவொரு தொழிலையும் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். தவிர, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மிகத் தாழ்வாகக் காணப்படுகின்றது. ஏனெனில் முகாம்களில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான தொடர் இடப் பெயர்வுகளின் விளைவாக தமிழ் இளையோர் தமது கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். இடப்பெயர்வு காலத்தில் இந்த மக்களுக்கு ஓர் உறுதியான தொழில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இலங்கை இராணுவத்தினர் பல ஆண்டுகளாக மக்களின் நிலங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் இந்த மக்கள் போரின் பின்னரும் தமக்கான வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முடியாதுள்ளனர். போர் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் வாழ்விடங்களில் இராணுவ மயப்படுத்தலும், இராணுவச் செலவினமும் இன்றும் அதிகரித்த வண்ணமேயுள்ளன.

இந்த ஆண்டில் இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 2 பில்லியன் டொலர்களாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இது ஏழு சதவீதத்தால் அதிகரித்துள்ளது

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஆய்வாளர் கிப்சன் பேற்மன் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire