jeudi 14 juin 2012

தடயங்களை அழிக்க சீனாவிடமிருந்து திரவம்; இலங்கை அவசரமாகத் தருவித்தது


இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

 
ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டு வைக்காது அழிப்பதற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. 
 
போர் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மேற்படி பகுதிகளில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே அங்கு எஞ்சியிருக்கக் கூடிய மனித புதைகுழிகளிலும் காணப்படும் எலும்பு எச்சங்களையும் உக்கச்செய்து மண்ணோடு மண்ணாக்க  திட்டமிடப்படுவதாக தெரிகிறது. 
 
 அந்தப் பகுதிகளை அங்குலம் அங்குலமாக இராணுவம் தோண்டி வருகின்ற நிலையிலேயே இந்தச் செய்தியும் வெளியாகியுள்ளது. ஆயுதங்களையும் கண்ணி வெடிகளையும் மீட்பதாகக்கூறி முள்ளிவாய்க்கால் நிலப்பகுதியை சல்லடை போட்டுத் தேடும் இராணுவம் அங்கு இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் எச்சங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் ஐ.நாவோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு ஒன்றினாலோ போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அப்பகுதிகளில் இருந்து போர்க்குற்ற ஆதாரமாக மனித எச்சங்கள் பல நூற்றுக் கணக்கில் கிடைத்து விடாமல் இருப்பதை உறுதிப் படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
 
 இதற்காகவே சீனாவிடமிருந்து எலும்புகள் முதலான எச்சங்களை முற்றாக அழிக்கும் சக்திவாய்ந்த விசேட திரவமொன்றை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் போர்க்குற்ற ஆதாரங்களை எந்தவித தடயமுமின்றி அழித்துவிட அரசு முனைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Aucun commentaire:

Enregistrer un commentaire