mardi 26 juin 2012

ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; ஜே.வி.பி

திருமுறிகண்டி பகுதியில் மக்களுக்கு படையினர் அச்சுறுத்தல் விடுத்ததை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

படையினரின் நில ஆக்கிரமிப்புக்கெதிராக இன்று திருமுருகண்டியில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை ஜே.வி.பி. வன்மையாக கண்டித்துள்ளது. 

இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாத நிலையிலும் சொந்த இடங்களில் குடியிருக்க முடியாதுள்ளவர்களாகவே உள்ளனர். 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம்  நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்று திருமுறிகண்டியில் நடைபெறவிருக்கும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பில் அப்பகுதி வாழ் மக்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

வடக்கு மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் தமது உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடுப்பதற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை எமது கட்சி கண்டிக்கின்றது. 

இதன் மூலம் வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லையென்பதையும் ஜனநாயகம் மறுக்கப்படுவதையும் தெளிவாக்கியுள்ளது.

இன்று வடக்கு, கிழக்கு மட்டுமன்றி முழு நாடுமே அபாயகரமான நிலையிலுள்ளதுடன் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கு சான்றாக, அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எமது கட்சியின் மக்கள் சந்திப்பு மீதான துப்பாக்கி பிரயோகமாகும். தற்போது நாட்டு மக்கள் ஜனநாயகம் தொடர்பில் பேசுவது அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வடக்கு மக்களும் இணைய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். 
 

Aucun commentaire:

Enregistrer un commentaire