mardi 18 décembre 2012

இலங்கை பிச்சைக்காரரின் அதிரவைக்கும் சொத்துமதிப்பு

சிறிலங்காவில் தொடருந்து நிலையத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தை அறிந்து அதிர்ந்து போயுள்ளனர். 

ராகம தொடருந்து நிலையத்தில் தொடருந்துப் பெட்டிகளில் ஏறி பிச்சை எடுத்து வந்த 18 பிச்சைக்காரர்களை அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகள் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். 

அவர்களில் ஒருவர் பணக்காரப் பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக ‘லங்காதீப‘ சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அவர் ஒரு வான், இரண்டு முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கு உரிமையாளராக இருப்பதும், அவரது வங்கிக்கணக்கில் 20 இலட்சம் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டபோது அவரிடம் 4000 ரூபா பணம் இருந்தது. அது இரண்டு மணி நேரத்தில் பிச்சை எடுத்து சேகரித்த பணம் என்று தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

தனது முச்சக்கர வண்டிகள் இரண்டையும் இவர் வெளியில் நாளாந்த வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். 

மாற்றுத் திறனாளியான இவர், ராகம தொடருந்து நிலையத்தில் தொழிலைச் செய்வதற்கு தனது வானிலேயே வருவார். 

பிச்சை எடுக்கும் போது அழுக்குத் துணிகளை அணிந்து கொள்ளும் இவர் மாலையில் வீடு திரும்பியதும், நல்ல சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்வார். 

குருநாகல் நாரம்மல பகுதியை சேர்ந்த இந்தப் பிச்சைக்காரர் இந்தத் தொழிலை தாம் நெடுநாளாகவே செய்து வருவதாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். 

பயணிகளை தொந்தரவு செய்வதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களை வளைத்துப் பிடித்தனர். 

இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, 2000 ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire