dimanche 7 septembre 2014

வழக்கை மூடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அப்பாவி புலி சண்முகநாதன் சுதாகரன் 20 வருட கடூழிய சிறை

janakaமேஜர் ஜெனரல் ஜானக பேரேரா இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியவர். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராகவும் அவுஸ்திரேலிய தூதராகவும் நியமிக்கப்பட்டார். இப்பதவிகளின் பின்னர் மகிந்த குடும்பத்துடன் முரண்பட்டுக்கொண்டார். இதன் பின்னர் எதிர்க்கட்சியுடன் இணைந்து வட மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரானார். ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய உறுப்பினரான ஜானக பெரேரா மகிந்த பாசிசத்திற்கு நிகரான துணிவுபெற்றவராக மக்கள் முன் சென்றார். அதேவேளை கொல்லப்படுவதற்கு முன்னர் பல தடவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக போலிசில் பாதுகாப்புக் கோரியுள்ளார்.
ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி 2008 ஆம் ஆண்டில் அனுராதபுரத்தில் புதிய யூ என் பி கட்சியின் அலுவலகத்தைத் திறந்து வைத்த போது தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டார்.
மகிந்த அரசை மிரட்டிய ஜானக பெரேராவை புலிகள் கொலை செய்ததக அரச படைகள் கூறியவை பலரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
சண்டே லீடர் போன்ற ஊடகங்கள் கொலையின் பின்புலத்தில் கோத்தாபயவும் கருணாவும் செயற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களை வெளியிட்டன. ஜானக பெரேரா கொல்லப்பட்ட அதே நாளில் கருணா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டது சந்தேகங்களை உறுதிப்படுத்தியது. மங்கள சமரவீர என அரசியல் வாதி இதனை வெளிப்படையாக்வே கூறினார்.
ஜானக பெரேரா பேரினவாத அரசியலின் அடியாளாகச் செயற்பட்டவர் என்பது ஒருபுறமிருக்க மகிந்த ராஜபக்ச கும்பலின் தனியாதிக்க பாசிச வெறிக்குப் பலியானவர் என்பது பலராலும் கூறப்பட்டது.
கடந்த 05ம் திகதி ஓகஸ்ட் மாதம் ஜனக பெரேராவின் கொலையில் தொடர்புடைய சண்முகநாதன் சுதாகரன் என்ற முன்னை நாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக புலம்பெயர் வேற்றுக்கிரக தேசிய பிழைப்புவாதிகளின் ஊடகங்கள் இச் செய்தியைப் பரபரப்பாகப் பரப்பின. அடிப்படையில் மகிந்த ராஜபக்ச அரசு ஜானக பெரேராவின் வழக்கை மூடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அப்பாவியே சண்முகநாதன் சுதாகரன்.
சித்திரவதை செய்து முன்னை நாள் போராளி ஒருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மகிந்த பாசிஸ்டுக்கள் அவரைச் சிறையிலடைத்துள்ளனர்.
இலங்கை அரசின் பிரச்சாரங்களின் காவிகளாக மாறியுள்ள புலம்பெயர் தமிழ் இனவாத ஊடகங்கள் செய்தியின் பிரதியை எந்த மாற்றமும் இல்லாமல் வெளியிட்டன.
வழக்குரைஞர்கள் புடைசூழ இந்தியாவிடம் உரிமை பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பாவிப் போராளி தண்டிக்கப்பட்டதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் சமையல் அறை வரைக்கும் சென்று வருவதாகக் கூறும் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசின் கொலைக் கரங்களுக்குள் சிக்கித்தவிக்கும் சுதாகரனுக்காகக் குரல்கொடுக்க முன்வரவில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire