dimanche 28 septembre 2014

பாகிஸ்தானுக்கு மோடி பதிலடி

பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து கொண்டு, அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.ஐ.நா., பொதுசபையின் 69வது ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பிரதமராக உங்கள் முன்பாக முதன்முறையாக பேசுகிறேன். நான் இந்திய மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நன்கு அறிந்தவன். அதே சமயம் இந்த உலகம் 125 கோடி மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் உணர்ந்துள்ளேன். ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென ஒரு தத்துவம் உள்ளது. நான் கருத்துக்களை சொல்லவில்லை. இந்த தத்துவம் ஒவ்வொரு நாட்டையும் வழிநடத்தும். இந்தியாவின் தத்துவம் "வாஷூதெய்வ குடும்பகம்". இந்தியா பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விரைவாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஐ.நா., அலுவலகத்தில் 193 நாடுகளின் கொடிகள் பறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறோம். இந்தியா எப்போதும், நீதிக்காகவும், கவுரவத்திற்காகவும், வாய்ப்புகளுக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளது. இந்த உலகில் தற்போது ஜனநாயக அலை வீசிவருகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் நடந்த அதிகார மாற்றம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதே போல், நேபாளத்தில் வலுவான ஜனநாயகம் அமைந்துள்ளது. 

இந்தியா உலகத்தை ஒரு குடும்பமாக பார்க்கிறது. பன்நோக்கு தன்மையில் இந்தியாவிற்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த நான் தயாராக உள்ளேன். ஆனால் அவை பயங்கரவாதத்தின் நிழலில் அமையக்கூடாது. பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை பாகிஸ்தான் தான் உருவாக்க வேண்டும். பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், இந்தியா உதவி செய்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம், அதன் அண்டை நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதன் காரணமாகவே, எனது அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து அண்டை நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டி வருகிறோம். தற்போது பயங்கரவாதம் புதிய வடிவில் உருவெடுத்துள்ளது. உலகில் உள்ள எந்த ஒரு நாடும் அதில் இருந்து தப்ப முடியவில்லை. பயங்கரவாதத்தை எதிர்க்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எதுவும் எடுத்துள்ளனவா? இந்த அமைப்பில் பிரச்னைகளை எழுப்புவது மட்டும், அதற்கு தீர்வாக அமைந்து விடாது. இந்தியா அதன் வெற்றியைப் பெற, அமைதியான சூழல் தேவைப்படுகிறது. பிரச்னைகளை களைய கடல், வான்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸ் ஆகியவற்றில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நல்ல பயங்கரவாதம் மற்றும் கெட்ட பயங்கரவாதம் என நாம் எப்போது பேச ஆரம்பிக்கிறோமோ, அது பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நோக்கம் குறித்த கேள்விகளை ஏற்படுத்தி விடுகிறது. பல ஆண்டுகளாக, இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது தான் இதை உலகம் உலகளாவிய பிரச்னையாக பார்க்க ஆரம்பித்துள்ளது. நாம் எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஐ.நா., தான். உலகளாவிய அரங்காக ஐ.நா., இருக்கும் போது நமக்கு எதற்காக ஜி4, ஜி7, ஜி 20 என பல்வேறு ஜி அமைப்புகள் உள்ளன? 

அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். உலகில் உள்ள மக்களில் 6ல் ஒருவர் இந்தியராக உள்ளனர். அமைதியை நோக்கிய பயணத்திற்காக நம்மை நாமே மாற்றிக்கொள்வோம். 21ம் நூற்றாண்டில் உலகம் வேகமாக மாறி வருகிறது. ஐ.நா., அமைதிப்படைக்கு இந்தியா முழு வலிமையை அளித்துள்ளது. வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களது பொறுப்புகளை அளிக்க வேண்டும். சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, ஒருவர் மற்றவரின் கவலைகளையும், அக்கறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உலகில் பல கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. உலக யோகா தினத்தை அனுசரிப்போம். உடல்நலத்தைப் பற்றி பேச வேண்டுமானால், நாம் பின்னோக்கி அடிப்படைக்கு செல்ல வேண்டும். அதற்கு குறிப்பாக யோகாவைப் பற்றி கூற விரும்புகிறேன். அடுத்த ஆண்டு ஐ.நா., அதன் 70 ஆண்டை கொண்டாட உள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு ஐ.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். நாம் தனியாக வளர்ச்சி அடைய முடியாது. இந்த உலகம் ஒருங்கிணைந்தே வளர்ச்சியடைய முடியும். இவ்வாறு மோடி பேசினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire