mardi 10 juin 2014

இறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு


மண்ணச்சநல்லூர் திருச்சியில், இறந்தவர் உடலை பெண்களே சுமந்து சென்று இறுதிச் சடங்குகளை நடத்தினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் வைரமுத்து (75). இவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். பெரியார் கொள்கையில் பற்று கொண்டிருந்த இவரது இறுதிச் சடங்கை பெண்களை கொண்டு நடத்துவதற்கு அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை வைரமுத்துவின் உடலை கருப்பு உடை அணிந்த 6 பெண்கள் அவரது வீட்டில் இருந்து சுமந்துகொண்டு டோல்கேட் வழியாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு சென்றனர். 

அங்கு வைரமுத்துவின் மனைவி செல்வி, அவரது மகள் சாந்தி மற்றும் அவரது உறவுப் பெண்களே இறுதிச் சடங்கில் செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் நடத்தினர். இறந்தவர் உடலுக்கு பெண்களே இறுதிச் சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

Aucun commentaire:

Enregistrer un commentaire