dimanche 17 novembre 2013

கூட்டுத் திருட்டை ஒழிக்கவே முடியாது.உலகத் திருடர்களையும், உள்ளுர் திருடர்களையும் இனம்காண்போம்

உலக நாடுகளுக்கு எல்லாம் வியாபாரம் செய்வதற்கு என்று புறப்பட்டு பின்பு அந்நாட்டு மக்களை தமது அடிமைகளாக்கிய பிரித்தானியா இன்று பொதுநலவாய மகாநாடு என்று இலங்கைக்கும் வந்திருக்கின்றது. மாகாராஜ என்று ஒருவர் ஒரு புறம். இவர் காதலித்தவளை மறைத்து விட்டு கௌரவத்திற்காக அழகியை கரம் பிடித்தவர். இவர் பின்பு கரம் பிடித்தவளுடன் தானும் வாழாமல் அவளையும் வாழவிடாது மரணத்திற்குள் தள்ளிய வரலாற்றைக் கொண்டவர். மறுபுறம் அண்மைக்காலம் வரை ஐரிஸ் மக்களின் விடுதலையை மறுத்த கூட்டத்தின் தலைவர் பிரித்தானிய ஆளும்வர்கத்தின் எடுபிடி. உலகம் முழுவதையும் தமது குடையின் கீழ் கொண்டுவந்து? சுரண்டி சும்மா இருந்து சாப்பிட்டு ஏப்பம் விட்ட கூட்டத்தின் தலைவர். இதற்காக தம்மால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள இனங்களுக்கிடையில் பிரித்தாளும் கொள்கைகளை திட்டமிட்டு செயற்படுத்தியவர். இதன் அறுவடைகள்தான் இன்றுவரை உலகின் பலநாடுகளிலும் அந்நாடுகளில் வாழும் தேசிய இனங்களுக்கிடையேயான பிரிவுகளும், உழைக்கும் வர்க்கங்கள் இடையேயான தனித்து நிற்று பலவீனப்பட்டிருக்கும் நிலமைகளும் ஆகும். இன்றுவரை உள்நாடுகளில் பரவி இருக்கும் இன முரண்பாடுகளும், இதன் தொடர்ச்சியான  உள்நாட்டுச் சண்டைகளும், யுத்தங்களும், அழிவுகளும். இன்று நீலிக்கண்ணீர் வடித்த வண்ணம் கறுப்புக் கண்ணாடி அணிந்து சமாதானத் தூதுவர்களாகவும், மனித உரிமைவாதிகளாகவும், நியாயம் கூறுபவர்களாகவும் தம்மைக் காட்டிக்கொண்டு வேஷம்போடும் செயற்பாடுகளும், அறிக்கைகளும் வலிகாமத்து மக்களின் மீள்குடியேற்றம்பற்றிய பேச்சுக்களும் வெறும் வேஷங்களே ஆகும். முதலில் இவர்கள் செய்யவேண்டியது எல்லாம் இவர்களின் மூதாதையர்கள் எங்கள் மூன்றாம் உலகநாடுகளில் கொழுத்திப் போட்டுவிட்டு போன பிரித்தாளும் வெடிகளால் ஏற்பட்ட யுத்தங்களுக்கும், பிரிவுகளுக்கும், அழிவுகளுக்கும் தாமே காரணம் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவதாகும். இதன்பின்பு தமக்கு இருக்கும் பலத்தை பாவித்து முடியமாயின் உள்நாடுகளில் உள்ள அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்வேண்டி தமது தார்மீக ஆதரவுகளையும், செல்வாக்குகளையும் பயன்படுத்துவதாகும். இதனை இவர்கள் செய்வார்களா? என்றால்..... இல்லை என்பதே பதிலாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் இன்று வரை இவர்கள் பிரித்தாளும் கொள்கைகளினால் சுரண்டலை தொடர்ந்தும் நவகாலத்துவ முறைப்படி செய்துகொண்டு, தமது ஆயுத வியாபாரங்களை செய்யவும் இவர்கள் விரும்புவதே காரணம் ஆகும். அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை விற்று வியாபாரத்தையும் செய்து பின்பு போலிச் சமாதானத்தை ஏற்படுத்தி புனர்நிர்மாணம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் இதே நாடுகளில் கொத்தராத்துக்கள் மூலம் சுரண்டலைத் தொடரும் சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தும் திருடர்கள் இவர்கள் என்பதை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இச் சர்வதேச திருடர்களும்  உள்ளுர் திருடர்களும் பங்காளிகளாக இருப்பது இவர்களுக்கு வாய்பாக இருக்கின்றது. எனவே இந்த சர்வதேச திருடர்களையும், உள்ளுர் திருடர்களையும் வர்க்க உடன்பாட்டுடன் இணைந்து எதிர்த்துப் போராட வேண்டியது எமது கடமை அல்லவா? மாறாக இனக் கூறுகளாக நாம் பிரிந்து நின்றால் இக் கூட்டுத் திருட்டை ஒழிக்கவே முடியாது.

Aucun commentaire:

Enregistrer un commentaire