vendredi 29 novembre 2013

வெளிநாட்டு விமானங்களை சுட்டு வீழ்த்த எமது விமானிகளுக்கு உத்தரவு!சீனா


புதிதாக அறிவித்துள்ள வான் பாதுகாப்பு எல்லைப் பகுதிக்குள் பறக்கும் எந்தவொரு வெளிநாட்டு விமானமும் சுட்டு வீழ்த்தப்படும் என இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. எந்த ஒரு நாடும் சாதாரணமாக விடுக்கும் அறிவிப்பு அல்லவா இது? இதில் வேறு ஏதாவது விசேஷம் உள்ளதா?
ஆம், உள்ளது. இவர்கள் குறிப்பிடும் பகுதி, கிழக்கு சீன கடலின் பெரும்பகுதிக்கு மேலே உள்ள வான்பகுதி. ஜப்பான் உரிமைகோரும் தீவு இருப்பதும் அங்குதான் என்பதே இந்த அறிவிப்பில் உள்ள விசேஷம்.
கடநத வாரம் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் முதலாவது வான் பாதுகாப்பு எல்லைப் பகுதி (ADIZ – Air Defence Identification Zone) என இந்த வான்பகுதியை அறிவித்தது. இங்குள்ள தீவுப் பகுதி தம்முடையது என உரிமை கோரும் ஜப்பான், தமது விமானப்படையின் போர் விமானங்களை தீவின் மேலே பறப்பதற்கு அவ்வப்போது அனுப்புவது வழக்கம்.
சீனாவின் இந்த அறிவிப்பின் பின், ஜப்பானிய விமானங்கள் ‘தமது பகுதிக்குள்’ பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் விமானப்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் குயேயோ லியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை ஜப்பான் மட்டுமல்ல, அமெரிக்காவும் மிக சீரியசாக எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
காரணம், அமெரிக்காவின் பசுபிக் தள போர்விமானங்கள், மற்றும் உளவு பார்க்கும் விமானங்கள் இந்தக் கடலின்மேல் பறப்பது வழக்கம். சில வருடங்களுக்கு முன், அமெரிக்க உளவு விமானம் ஒன்றை சீன போர் விமானங்கள் பலவந்தமாக தரையிறக்கிய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அப்போது, அமெரிக்க உளவு விமானம் பறந்துகொண்டிருந்த வான் பகுதியும், கிழக்கு சீன கடலின் மேலுள்ள பகுதிதான்!
சீனா தமது வான் பகுதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டபின், அமெரிக்கா சும்மா இருக்கவில்லை. நேற்று முன்தினம் தமது B-52 குண்டு வீச்சு விமானங்களை அந்த வான் பகுதியில் இப்படியும், அப்படியுமாக பறக்க விட்டுக்கொண்டு இருந்தார்கள்!
அமெரிக்க விமானங்கள் பறந்தபின் இன்று, மேஜர் ஜெனரல் குயேயோ லியாங் சீன அரசு வானொலிக்கு வழங்கிய பேட்டியில், “இந்த வான் பகுதியில் எந்தவொரு வெளிநாட்டு விமானம் பறப்பதை எமது போர் விமானிகள் கண்டாலும் சுட்டு வீழ்த்தும்படி உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானத்தை கண்டால் எமது விமானிகள், தரையில் இருந்து அனுமதி பெற வேண்டியதில்லை. உடனடியாக சுட்டு விடலாம்” என்றார்.
அடுத்த சில தினங்களுக்கு இந்த வான்பகுதியில் நடக்கக்கூடிய சம்பவங்கள், சில முறுகல்களை நிச்சயம் ஏற்படுத்ததான் போகின்றன.
இது ஒரு சுவாரசியமான விவகாரம். சற்று ஆழமாக தெரிந்துகொள்ள விரும்பினால், நாம் இணைத்துள்ள போட்டோக்களை பாருங்கள்.
1-வது போட்டோ, சீனா புதிதாக அறிவித்துள்ள வான் பகுதியை காட்டுகிறது. 2-வது போட்டோவில் உள்ளதுதான், ஜப்பான் உரிமைகோரும் தீவுகள். 3-வது போட்டோவில் அந்தப் பகுதியில் பறக்கும் போர் விமானங்கள். 4-வது போட்டோவில், தீவு அருகே வரும் சீன கப்பல்களை ஜப்பானியக் கப்பல் தண்ணீர் அபிஷேகம் செய்து துரத்துவதையும், 5-வது போட்டோவில், இரு ஜப்பானியக் கப்பல்கள், சீனக் கப்பலை சிறைப்பிடித்து இருப்பதையும் பாருங்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire