mercredi 23 juillet 2014

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 200 இளம் வயது மாணவிள் சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர் மரணம்

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் இத்தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளி விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப்போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட மாணவிகளில் சில மாணவிகள் தப்பி வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இன்னமும் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாணவிகள் கடத்தப்பட்ட சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சு வலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடத்தப்பட்ட இரண்டு பெண்களுக்கு தந்தையானவர் ஒரு வகை கோமாவில் சிக்கி மாணவிகளின் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். சில தினங்களுக்கு பின் அவரும் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவிகளின் பெற்றோர் இறந்தது குறித்த தகவல் கிடைத்ததும், அந்நாட்டு அதிபர் குட்லக் ஜோனாதன் கடத்தப்பட்டு தப்பிவந்த மாணவிகளையும், கடத்தப்பட்டுள்ள மாணவிகளின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். யாரும் தவறான முடிவெடுக்கவேண்டாம் என அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire