lundi 14 juillet 2014

போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 பள்ளி மாணவிகளை மீட்க தொடர்ந்து போராடுவேன் : மலாலா

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோரை சந்தித்த  பாகிஸ்தானியப் பெண் யூசுப்ஸாய் மலாலா அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் கட்ந்த ஏப்ரல் மாதம் போகோ ஹராம் தீவிரவாதிகளால் 300க்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டிருந்தனர். இவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவர்களில் சிலர் தாங்கள் இருந்த இடத்திலிருந்து தப்பி வீடு திரும்பிய நிலையில் இன்னமும் 200க்கு மேற்பட்ட மாணவிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்நிலையில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த பாகிஸ்தானியப் பெண் மலாலா கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை நைஜீரியாவில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  மலாலாவின் வருகைக்காக அவருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர், தங்களின் மகள்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ஏனைய 200 சிறுமிகளையும் பாதுகாப்பாக மீட்க தாமும் கடும் முயற்சி செய்யப் போவதாக மலாலா தெரிவித்தார்.

இன்று தனது 17வது பிறந்த தினத்தை நைஜீரியாவின் வடக்கில் உள்ள சிறு கிராமமான சிபோக்கில், போகோஹராம் குழுவினரிடமிருந்து தப்பி வீடு திரும்பிய சிறுமிகளுடன் இணைந்து கொண்டாடினார் மலாலா.

மேற்குலக பாணியிலான கல்வியைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியே குறித்த 300 மாணவிகளையும் போகோஹராம் குழுவினர் கடத்தியிருந்தனர். இப்பெண்களை மீட்க உருவாக்கப்பட்ட #bringbackourgirls எனும் பிரச்சாரம், ஆஞ்சலினா ஜூலி, மிச்சேல் ஒபாமா போன்றோரின் ஆதரவுடன் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலாலா ஆதரவு தெரிவிக்கும் Save the Chldiren சமூக அமைப்பினால் திரட்டப்படும் நிதியைக் கொண்டு யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் சுமார் 50 மில்லியனுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களது கல்வி உரிமையை பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிரியா, தென் சூடான், நைஜீரியா போன்ற நாடுகளில் யுத்த வலயங்களில் உள்ள பள்ளிகள் இராணுவக் காவலரன்களாக உபயோகிக்கப்படும் நிலை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire