lundi 12 mars 2012

சனல்-4 ஆவணப்பட இயக்குனர்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளின் போர்க்குற்றங்களைத் தடுக்க ஐ.நாவோ மேற்குலகமுமோ காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று “சிறிலங்காவின் கொலைக்களங்கள்“ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார். பிபிசி சிங்களசேவைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்கா அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை ஐ.நா ஆவணங்களும், விக்கிலீக்சில் வெளியான அமெரிக்காவின் தொடர்பாடல் குறிப்புகளும், ஐ.நாவின் முன்னாள் மூத்த அதிகாரி ஜோன் ஹோம்ஸ்சின் செவ்வியும் உறுதி செய்துள்ளன. அனைத்துலக சட்டங்களின் கீழ் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது முதன்மையான கடமை. அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதில் அனைத்துலக சமூகம் தவறிழைத்து விட்டது. அனைத்துலக சமூகம் சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுக்கத் தவறியதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. அப்போதைய சூழலில் தீவிரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் நடத்திய உலகளாவிய போர் என்ற மேற்குலக நிகழ்ச்சி நிரலை ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு தமது செயற்பாட்டை நியாயப்படுத்தியது. சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள புதிய ஆவணப்படம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதை தெளிவாக உறுதி செய்கிறது. சிறிலங்காப் படையைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள் காணொலி நிபுணர்களால் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அது உண்மையானதே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காயத்தின் தன்மையின் மூலம் அந்த இறப்பு ஒரு மோசமான படுகொலை என்பதை உறுதி செய்கிறது. விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களும், போராளிகளும் முறைப்படியாகத் திட்டமிட்ட அடிப்படையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தக் கொலை உறுதிப்படுத்துகிறது. பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு சிறிலங்கா அதிபர் மகந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம்சாட்டுகிறது. சிறிலங்கா இராணுவம் மிகமிக ஒழுக்கமானது, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் போரைத் தாமே வழிநடத்தியதாகவும் சிறிலங்கா அதிபரும், பாதுகாப்புச் செயலரும் தொடர்ச்சியாக உரிமை கோரி வந்துள்ளனர். ஐ.நா பதுங்குகுழிகள் மீதும் அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், கோத்தாபய ராஜபக்சவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் அது நேரடியாக தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சற்று விலகி தாக்குதல்கள் தொடர்ந்தன. இது போர் தவிர்ப்பு வலயம் மீதான தாக்குதல்களை சிறிலங்காவின் உயர்மட்டக் கட்டளை படம் நன்றாகவே அறிந்திருந்தது என்பதை உறுதிசெய்கிறது. மனிதகுலத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர். பொதுமக்களை கேடயமாக பாவித்தது உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை எவரும் நிராகரிக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை, அவற்றுக்குச் சவால்விட முடியாது." என்றும் அவர் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire