mardi 6 mars 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என்று, பிரதமருக்கு மீண்டும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்

சென்னை:"ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என்று, பிரதமருக்கு மீண்டும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்:இலங்கை தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க, ஐ.நா.,விடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டுமென, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் நான் எழுதிய கடிதங்களில் தங்களிடம் வலிறுத்தியுள்ளேன். இலங்கை தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, சிங்களர்களுக்கு சமமான உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கும் வரை, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க, மற்ற நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருந்தேன். இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். எனது கடிதத்துக்கு எவ்வித பதிலும் இல்லாத நிலையில், ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து சில ஊடகங்களில் தகவல்கள் வந்துள்ளன.குறிப்பிட்ட நாடு தொடர்பான தீர்மானத்துக்கு இந்தியா எதிராக உள்ளதாகவும், பிரபஞ்ச அளவில் விவாதங்களைத் துவக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புவதாக, ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்படி என்றால், இலங்கை அரசுக்கு நேரடியாக ஆதரவு தருவதாக அமையும். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவே, அமெரிக்கா ஆதரவுடன் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire