samedi 31 mars 2012

விசாகப்பட்டினத்தில் 75 நக்சலைட்கள் சரண் அடைந்தனர்.

ஆந்திராவில் சில மாவட்டங்களில் நக்சலைட் ஆதிக்கம் உள்ளது. அவர்களை சரணடைய செய்ய மாநில அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த 75 நக்சலைட்கள், டிஐஜி சவுமியா மிஸ்ரா முன்னிலையில் நேற்று ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இது பற்றி சவுமியா அளித்த பேட்டியில், ‘‘சரணடைந்த நக்சலைட்களில் 8 பேர் முக்கியமானவர்கள். லம்பாசிங்கில் கடந்தாண்டு நவம்பர் 11ம் பிஎஸ்என்எல் கோபுரத்தை வெடிவைத்து தகர்த்தது, செர்லபள்ளியில் கடந்தாண்டு டிசம்பரில் ஆந்திர வனத்துறை மேம்பாட்டுக் கழக குடியிருப்பை எரித்தது, ராலகெடாவில் இந்தாண்டு பிப்ரவரியில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய சம்பவங்களில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். சரணடைந்த நக்சலைட்கள் வன்முறையை பாதையை கைவிட்டுள்ளனர். ஒழுக்கமாக வாழும் வரையில், இவர்கள் மீதான எந்த வழக்கின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்’’ என்றார். சரணடைந்த நக்சலைட்களில் பிரேம் சிங், கங்கராஜு ஆகியோர் கூறுகையில், ‘‘கட்டாயத்தின் பேரில் வன்முறை செயல்களில் ஈடுபட்டோம்’’ என்று கவலை தெரிவித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire