lundi 12 mars 2012

ஐ.நா.வின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிப்பது இந்தியாவுக்கு தீங்கானது :- சுவாமி

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையை கண்டிக்கும் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை ஐ.நா.வின் கூட்டத்தில் நிறைவேற்றும் முயற்சிக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாதென ஜனதா கட்சியின் தலைவர் இன்று கூறியுள்ளார். இத்தீர்மானத்துக்கு இந்தியா ஆதவளிப்பது, காஷ்மீர், மணிப்பூர் தொடர்பில் இதுபோன்ற தீர்மானங்கள் கொண்டுவரப்படும் நிலைமையை தோற்றுவிக்கும். இலங்கை தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கை அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள இந்தியா தூண்ட வேண்டுமென சுவாமி கூறினார். ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையகத்திலுள்ள மனித உரிமைக் குழுக்களின் தந்திர வலையில் இந்தியா வீழ்ந்து விடக்கூடாது என சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார். முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் தமிழீழ புலிகளின் உரிமை மீறல்களை பூரணமாக கவனிக்காது விட்டுள்ளது எனவும் அவர் கூறியிருக்கிறார். இவ்வாறான பக்கச்சார்பான தீர்மானத்துக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு காஷ்மீர், மணிப்பூர் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவர வழிவகுப்பதாக அமையும். இந்தியாவுக்கு கெட்ட பெயரை கொண்டுவரத் துடிக்கும் தீவிரவாத சக்திகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும் என சுவாமி கூறினார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் கலந்தாலோசித்த பின் விட்டுக்கொடுப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து இலங்கையின் தமிழ் பிரஜைகளின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய யாப்பு திருத்தங்களை கொண்டு வந்து அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தூண்டுதலளிக்க வேண்டும் என சுவாமி கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire