jeudi 18 octobre 2012

ராஜபக்சேக்கள் சொன்னதை நம்பினோம் இந்தியாவும் அதையே நம்பியது - நிருபமா



newsவிடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்’ என ஒட்டுமொத்த ராஜபக்ச அமைச்சரவையே சொன்னது. அதனை இந்தியா நம்பியது. 
இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் நிருபமா ராவ்.
 
ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய செவ்வியிக்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை நிலவரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் நழுவலாகவும் கெட்டித்தனமாகவும் பதிலளித்தார்.
 
''2009 இலங்கைப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என ஐ.நா. சபையே சொல்கிறது. போர் நடந்தபோது அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், போரில் இலங்கைக்கு இந்திய‌ அரசு உதவி செய்ததும் தார்மீக ரீதியில் சரிதானா?'' 
 
(கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பேசத் தொடங்குகிறார்) ''முதலில் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை என்பது இந்தியாவின் நட்பு நாடு. அதனால், அவர்களுக்கு இந்தியா சில உதவிகள் செய்ததாக அறிகிறேன். அண்டை நாடு என்ற முறையில் இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை கூற முடியுமே தவிர, ஆணையிட முடியாது.
 
'விடுதலைப் புலிகள் உடனான போரில் அப்பாவிப் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்’ என இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வேண்டுகோள் வைத்தனர். நானும் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனனும் பல முறை அலரி மாளிகையில் இலங்கை அதிபரை இது தொடர்பாகச் சந்தித்துப் பேசினோம். 
 
'விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்’ என ஒட்டுமொத்த ராஜபக்ச அமைச்சரவையே சொன்னது. அதனை இந்தியாவும் நம்பியது.'' 
 
''அப்படியென்றால், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான க‌ர்ப்பிணித் தாய்மார்களையும் பச்சிளங் குழந்தைகளையும்கூட விடுதலைப் புலிகள் என நம்பச் சொல்கிறீர்களா?'' 
 
(முகம் மாறுகிறது) ''நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என நினைக்கிறேன். தமிழர் என்ற உணர்வின் காரணமாகக் கேட்கிறீர்கள். இலங்கைப் போர் முற்றிலும் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்த ஒன்று. எனக்கு விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டது. பை... பை...!'' (என்றபடி எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்) 
 
''ஒரு பத்திரிகையாளனாக அல்ல... ஒரு மனிதனாகக் கேட்கிறேன். வெளியுறவுத்துறைச் செயலராக இல்லாமல் ஒரு பெண்ணாக நீங்கள் பதில் சொல்லலாமே மெடம்?'' 
 
''மரணம்... எல்லாவித‌ சமாதானத்துக்கும் சமாளிப்புக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்த உலகம் உணர வேண்டும். போரின்போது அப்பாவிகள் பாதிக்கப்படும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்!'' 
 
- சொல்லிக்கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார் நிருபமா ராவ். 

Aucun commentaire:

Enregistrer un commentaire