vendredi 19 octobre 2012

சிறிலங்காவுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்த முனைகிறதா இந்தியா?

19 ஒக்ரோபர் 2012, திருகோணமலை, சம்பூரில் சிறிலங்காவுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக அமைக்கத் திட்டமிட்டுள்ள அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தாமதமடைவதால், சிறிலங்கா பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2011 செப்ரெம்பரில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து, 2016 ஜுலையில் நிறைவு செய்வதற்கு சிறிலங்கா மின்சாரசபை திட்டமிட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துடன் சிறிலங்கா கடந்த ஆண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

எனினும், இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இதன்காரணமாக ஏற்பட்டுள்ள இழுபறியால், 2016இல் சிறிலங்கா பாரிய மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

இதனால் சிறிலங்கா மோசமான மின்வெட்டு பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

இது 2016ம் ஆண்டில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

இந்த உடன்பாட்டில் ஒன்றிரண்டு மாற்றங்களை செய்தால், சிறிலங்கா மின்சார சபை பல ஆண்டுகளுக்கு பில்லியன் கணக்கான ரூபா இழப்பை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா மின்சாரசபையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மூன்றாவது கட்டங்கள் 2014இல் நிறைவு செய்யப்பட்டாலும், அதன் மூலம் உற்பத்தியாகும் 600 மெகாவாட் மின்சாரம், வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்காது.

அதைவிட திரவ எரிபொருளைப் பயனப்படுத்தி மின் உற்பத்தி செய்வதற்கான செலவினங்கள் பெருமளவில் அதிகரிக்கும் என்பதால், சம்பூரையே நம்பியிருக்க வேண்டிய நிலை சிறிலங்காவுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் அண்மையில் சாத்திய ஆய்வை முடித்துள்ளதால், சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நம்புவதாக, சிறிலங்கா மின்சார சபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire