mercredi 17 octobre 2012

தண்டனை வழங்கினால் மட்டுமே துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தலாம்! அமைச்சர் கரலியத்த


சிறுவர்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாகக் கடைப் பிடித்து உரிய தண்டனைகள் வழங்கினாலே சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்த முடியும் என பெண்கள் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

 குறிப்பாக பெண் பிள்ளைகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் பற்றி கூடுதல் அக்கறையுடன் இருப்பது அவசியம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சர்வதேச பெண் பிள்ளைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் 30 வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் காரணமாக பல பெண் பிள்ளைகள் பாதிக்கப்பட்டனர். பலர் பெற்றோர்கள், சகோதரர்களை இழந்து அநாதரவாக்கப்பட்டனர். இந்த நிலை தற்போது மாறியுள்ளது. சிறுவர்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாகக் கடைப்பிடித்து உரிய தண்டனைகளை வழங்கினாலேயே சிறுவர் துஷ்பிர யோகங்களை கட்டுப்படுத்த முடியும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளைச் செய்து வருகிறது. வடக்கில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக வாழ முடிந்தாலே இந்த அபிவிருத்தியின் பயன்களை முழுமையாக அடைய முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவுடன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்றுக் காலை யாழ் முனியப்பர் கோவில் முன்றலிலிருந்து பிரதம அதிதிகள் ஊர்வலமாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

முற்பகல் 9.30 மணியளவில் இந்நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது. இந்த நிகழ்வில் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நாடகங்களும் இங்கு நடைபெற் றிருந்தன.




Aucun commentaire:

Enregistrer un commentaire