dimanche 14 février 2016

மரத்தை கட்டிபிடித்தவர்களை வெட்டிய கல்லறை வாசகங்கள் நீங்கள் என்னைக் காண வேண்டுமென்றால், சுற்றிலும் பாருங்கள்

காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும்  சமர்ப்பனம் அக்னி செய்தி! ... 
கி.பி. 1730 ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங் தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க நினைத்தார். ஆனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் இவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. அந்த மரங்களை வெட்ட தனது ஆட்களை அனுப்பினார்.
அந்த பகுதியில் வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்' என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். மன்னரின் ஆணையை கேட்ட மக்கள் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். பதறிப்போன மக்களும் வேறு வழியின்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மரத்தையும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். அதில் பெரும் பாலானவர்கள் பெண்கள் !
வீரர்களும் மன்னரின் உத்தரவை மீற முடியாமல் மரத்தை கட்டிபிடித்தவர்களை முதலில் வெட்டிப் போட்டுவிட்டு பின் மரத்தை வெட்டினார்கள். மூணு பெண் குழந்தைகளுக்கு தாயான 'அம்ரிதா தேவி' என்ற பெண் தனது குழந்தைகளுடன் முதலில் உயிரை விட்டார். இப்படியே 363 மரங்களையும் அதனை கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டிய பின்னரே மன்னரின் மனம் இளகியது.....?!! 'போதும் நிறுத்துங்கள் இந்த இடம் வேண்டாம்' என்று போர்வீரர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார். மரங்களுக்காக தங்களின் உயிரை விட்ட அம்மக்களின் தியாகம் எவ்வளவு பெரிது
இந்த மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபெற்ற முதல் எதிர்ப்பு என்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை 'சிப்கோ இயக்கம்' என்று கொண்டாடுகிறார்கள். 'சிப்கோ' என்றால் தழுவுதல் என்று அர்த்தம். 'கொண்டாடுகிறோம்' என்று சொல்ல இயலவில்லை!? ஏன்னா பலருக்கும் இந்த இயக்கம் பற்றியே தெரியாது என்பதே உண்மை.
சிப்கோ இயக்கம்;-
1974-ம் ஆண்டில் உத்தராகண்ட் மாநிலத்தில் சிப்கோ இயக்கம் தோன்றியது. ‘சிப்கோ’ என்றால் இந்தியில் ‘கட்டியணைப்பது’ என்று பொருள். கௌராதேவி என்றமலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் தலைமையில் 27 பெண்கள், ரேணி கிராமத்தில்ஆயிரக்கணக்கான மரங்களைக் கட்டியணைத்து காப்பாற்றினர். தொடர்ந்து அந்தப்பகுதியில் மரம் வெட்டுவதை, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி முழுமையாகத் தடைசெய்தார். பின்னர் இந்த இயக்கம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
1981-ம் ஆண்டு இந்திய அரசு, சுந்தர்லால் பகுகுணா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க வந்ததை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ''இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. இந்தியாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த 'வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும் !'' என்றாராம். தற்போது வரை அந்த தகுதியை அவர் அடையவில்லை என்பது சந்தோஷபடகூடிய செய்தி அல்ல !!?
ஹியூகோ உட்;-
ஹியூகோ உட் (Hugo Wood) என்ற ஆங்கிலேய இந்திய வனப் பணி அலுவலர் (1870-1933), தான் உருவாக்கிய தேக்குமரக் காடுகளுக்கு இடையே தன் கல்லறையை உருவாக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். ஆனைமலை டாப் ஸ்லிப்பில் உள்ள அவரது கல்லறையிலே எழுதப்பட்டுள்ள வாசகங்கள், மரங்களின் மீது அவர் கொண்டிருந்த அழியாக் காதலை வெளிப்படுத்துகின்றன. "நீங்கள் என்னைக் காண வேண்டுமென்றால், சுற்றிலும் பாருங்கள்" என்ற வாசகம் அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லறையைச் சுற்றிலும் நெடிதுயர்ந்த தேக்கு மரங்கள் நிறைந்த அடர்ந்தகாடு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் பிறந்து, இந்தியா வந்து இங்கே மரம் வளர்த்து, காடுகளைக் காக்கும் பணியில் ஈடுபட்ட ஓர் உன்னத ஆன்மாவின் உயர்பண்புகள், அவர் கல்லறையைக் காண்பவர்களின் கண்களைப் பனிக்கச் செய்கின்றன
இன்றைய உண்மை நிலை:-
ஆனால், காடுகளின் இன்றைய நிலை என்ன என்று நினைத்துப் பார்க்க வேண்டும். உலகில் காடுகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பரப்பளவில் 23.4% காடுகளும் மரங்களும் உள்ளன.
ஒரு நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளே இயற்கை வளம் செறிந்தபகுதிகளாகவும், பல்லுயிரியம் நிறைந்த இடங்களாகவும் திகழ்கின்றன. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளும், வடகிழக்கு இமயமலைப்பகுதிகளும் காடுகள் செழித்துப் பல்லுயிரிய உறைவிடங்களாகத் திகழ்கின்றன. இங்கிருந்துதான் வற்றாத ஜீவநதிகள் உருவாகி இந்தியாவை வளம் கொழிக்கச்செய்கின்றன.
இயற்கைக் காடுகளின் பரப்பளவு 17.59%. ஒருநாட்டின் நிலப்பரப்பில் 33% காடுகளாக இருக்க வேண்டும். அப்படிக் காடுகள் நிறைந்து இருந்தால்தான் உயிரினங்கள் நலம் பெறும்.
மரங்கள் மனிதனின் தயவு இல்லாமல் கூட வளர்ந்துவிடும்,
மனிதனால் மரங்கள் இன்றி வாழ இயலாது என்பதே உண்மை நிலை.

Aucun commentaire:

Enregistrer un commentaire