samedi 6 février 2016

ஜெனிவா தீர்மானம் குறித்து முக்கிய பேச்சு!!மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன்

un_human_right_commissionerநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், இராஜதந்திர சமூகத்தினர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவினர் ஆகிய தரப்புகளைச் சந்தித்து இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். விசேடமாக முப்படைத் தளபதிகளையும் இவர் தனது விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திற்கும், நாளைமறுதினம் திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹுசைன் அங்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அது தவிர, போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் கொழுப்பில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து ஐ.நா. தீர்மானம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஹுசைன் பேச்சு நடத்தவுள்ளார்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு 07, நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டத்துக்கு முன்னால் மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது என்று மஹிந்த ஆதரவு பொது எதிரணியினரின் முக்கிய உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire