dimanche 21 février 2016

ரஷ்யா முன்வைத்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்தது.

சிரியாவில் துருக்கி மேற்கொண்டு வரும் எறிகுண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி, ரஷ்யா முன்வைத்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சிரியாவில் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, 17 நாடுகள் அடங்கிய “சிரியா ஆதரவுக் குழு’ ஜேர்மனியின் மியூனிக் நகரில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில், “இன்னும் ஒரு வாரத்துக்குள் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று உடன்பாடு எட்டப்பட்டது. எனினும், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கான கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையிலும், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
சிரியாவைச் சேர்ந்த குர்துப் படையினர், அமெரிக்க வான்வழித் தாக்குதலின் உதவியுடன், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.
இந்த நிலையில், சிரியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள குர்துப் படையினரின் நிலைகள் மீது, எல்லைக்கு அப்பாலிருந்து துருக்கி ராணுவம் எறிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
துருக்கியின் குர்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது துருக்கி ராணுவம் எறிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிரியாவில் துருக்கி மேற்கொண்டு வரும் எறிகுண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தக் கோரும் வரைவுத் தீர்மானத்தை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசரக் கூட்டத்தில் ரஷ்யா முன்வைத்தது.
எனினும், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 6 ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்கள் அந்த வரைவுத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க மறுத்ததால், அது நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே, சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை, திட்டமிட்டமிட்டபடி வரும் வியாழக்கிழமை தொடங்காது என சிரியா விவகாரத்துக்கான ஐ.நா. அமைதித் தூதர் ஸ்டெஃபான் டி மிஸ்டுரா தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire