vendredi 5 avril 2013

கிளிநொச்சியில் உள்ள பளை எனுமிடத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் சமாதான பல்கலைக்கழகம்

சர்வதேச சமாதான பல்கலைக்கழகமொன்று வட மாகாணத்தில் ஸ்தாபிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி செயலக சமூக அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் கலாநிதி நந்தன விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

உத்தேச சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் சுமார் 50 ஏக்கர் பரப்பில் கிளிநொச்சியில் உள்ள பளை எனுமிடத்தில் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கான நிதி உதவியை இலங்கையில் சமாதானத்தில் அக்கறையுள்ள உலக நாடுகளும், புலம்பெயர் நன்கொடையாளர்களும் வழங்கவுள்ளனர் என அவர் குறிப்பிட்டதுடன்,

இப்பல்கலைக்கழகத்தில் ஆறு பீடங்களும், பட்டப்பின்படிப்பு வசதிகளும், க. பொ. த. (சா/த), க. பொ. த (உ/த) பயின்றவர்களுக்கான சான்றிதழ் கற்கைநெறிகளும், தெற்காசிய நாடுகளின் மாணவர்களும், சார்க் நாடுகளின் மாணவர்களும் இப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை முறியடித்து உலகிற்கு முன்மாதிரியாக இருந்துவரும் நமது நாட்டில் சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் அமைய வேண்டும் கடந்த முப்பது வருட யுத்தம் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த முரண்பாடுகளைக்களைந்து எல்லோரும் இலங்கையர் என்ற எண்ணக் கருவையும், இளைஞர்களின் அபிலாசைகளை புரிந்துகொள்ளும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி சமூக அபிவிருத்தித் திட்டம் முக்கிய பங்களித்து வருகிறது.

இச்சமூக அபிவிருத்தித் திட்டத்தில் இணைந்துகொள்வதில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள், முன்னாள் போராளிகள் என பல்வேறு தரப்பினர் ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire